கவர்னர் மாளிகையில் மருத்துவமனை?-இல்லை என்று உறுதிமொழி
சென்னை: எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை கவர்னர் மாளிகையில் மருத்துவமனை கட்டும் திட்டம் ஏதும் இல்லை என்று உயர் நீதிமன்றத்திடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,
சென்னை கவர்னர் மாளிகை வளாகத்தில் 400 படுகை வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் கட்டப்பட இருப்பதாக அதன் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். கட்டிடம் கட்ட அனுமதித்தால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், பறவைகள், விலங்குகள் அழிந்து விடும். எனவே அங்கு ஆஸ்பத்திரி கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கவர்னர் மாளிகையில் எந்தவித கட்டுமான பணியும் நடத்தக் கூடாது என இடைக்கால தடை விதித்தது.
இந் நிலையில் நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கவர்னரின் முதன்மை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில்,
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் கவர்னர் மாளிகையில் மருத்துவமனை கட்டும் திட்டம் இல்லை. எதிர்காலத்திலும் அங்கு எந்தவித கட்டிடங்களும் கட்டப் போவதில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என கூறி வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications