புளியங்குடி எல்ஐசி அலுவலகத்தில் ரூ.8 லட்சம் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புளியங்குடி: புளியங்குடியில் எல்ஐசி அலுவலகத்தை உடைத்து ரூ.8 கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எல்ஐசி கிளை அலுவலகம் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு 8 மணிக்கு வழக்கம் போல் கிளை மேலாளர் சுந்தரராஜன் மற்றும் ஊழியர்கள் பணிகளை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை 9.30 மணிக்கு அலுவலகத்தை திறப்பதற்காக வந்தபோது வெளியே இருந்த இரும்பு ஷட்டர் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உள்ளே சென்றுபார்த்தபோது கிளை மேலாளர் அறையில் இருந்த அரை டன் எடையுள்ள பணம் மற்றும் செக்குகளை வைக்கும் பெட்டி கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அந்தபெட்டியில் ரூ.5.76 லட்சத்திற்கு பணமும், 1 லட்சத்து 85 ஆயிரத்து 763 ரூபாய்க்கு செக்குகளும் இருந்தன. இது குறித்து கிளை மேலாளர் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைபாண்டி. மற்றும் போலீசார் எல்ஐசி அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.