சாதனைகள் புரிந்துள்ள திமுகவுக்கே மக்கள் ஆதரவு: ஸ்டாலின்
பெரம்பலூர்: பல சாதனைகள் புரிந்துள்ள திமுகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் பேராதரவு தருவார்கள் என்று தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்..
பெரம்பலூர், துறைமங்கலத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இல்லத் திருமண விழா மற்றும் தி.மு.க. மாவட்ட செயலர் துரைசாமி இல்லத் திருமண விழா நடந்தது. இத்திருமணங்களை துணை முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் தற்போது பரவலாக சீர்திருத்த திருமணங்கள் நடந்து வருகின்றன. இந்த சீர்திருத்த திமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் மசோதா அண்ணாதுறை முதல்வராக இருந்த காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டது. இது திருமண விழா மட்டுமன்று, தேர்தல் பிரசார விழாவும் கூட என்று இங்கே பேசிய கட்சி நிர்வாகிகள் கூறினர்.
திமுகவுக்கு எத்தனையோ சோதனைகள் வந்தது. சோதனைக் காலத்தில் கட்சியை விட்டு வெளியேறிவர்களில் ஏராளமானோர் மீண்டும் திமுகவுக்கே வந்துவிட்டனர். அவ்வாறு கட்சியைவிட்டு வெளியேறிச் சென்று மீண்டும் திரும்பிய செல்வராஜுக்கு கலைஞர் அமைச்சர் பதவி கொடுத்தார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் நான் பெரம்பலூருக்கு வந்து வளர்ச்சிப் பணிகள் துவக்கியும், நலத் திட்ட உதவிகள் அளித்துள்ளேன். தமிழகத்திற்க்கு பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் பேராதரவு அளிப்பார்கள் என்றார்.
அழுத திமுக தொண்டர்-தேற்றிய ஸ்டாலின்:
பெரம்பலூர் வந்து ஸ்டாலினுக்கு வேப்பூரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது மற்றவர்கள் சால்வை கொடுக்க, ஒருவர் மட்டும் ஒரு துண்டு சீட்டு கொடுத்தார். பின்னர் ஸ்டாலின் அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு நிமிடம் பேசவும் என்று எழுதப்பட்டு ஒரு செல்போன் எண் இருந்தது.
உடனே ஸ்டாலின் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது திமுக தொண்டரான பொன்முடி என்பவர் பேசினார். அவர் துணை முதல்வரே தன்னை அழைத்துப் பேசியதால் ஆனந்தத்தில் கதறி அழுதார். பின்னர் தனது ஊரான இருமாத்தூருக்கு வந்து கொடியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஸ்டாலின் நிறைவேற்றுவதாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications