பிப்ரவரி 28ம் தேதி மத்திய பட்ஜெட், 25ல் ரயில்வே பட்ஜெட்
டெல்லி: 2011-12ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 28ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு முன் 25ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் உரையுடன் கூட்டம் தொடங்கும்.
இந்தக் கூட்டத் தொடர் இரு கட்டங்களாக நடைபெறும். முதலில் பிப்ரவரி 21ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரையும், அடுத்த கட்டமாக ஏப்ரல் 4ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரையும் நடக்கும்.
இந் நிலையில் அவையில் ஜனாதிபதி ஆற்ற வேண்டிய உரைக்கு மத்திய அமைச்சரவை நேற்றிரவு ஒப்புதல் அளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உரை படித்துப் பார்க்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை அமைதியாக நடத்த விட வேண்டுமானால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
அவையை அமைதியாக நடத்த இந்தக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி அதன் பின்னர் கூட்டுக் குழு விசாரணை குறித்து முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு கூற ஆரம்பித்துள்ளது.
இதனால் பட்ஜெட் கூட்டத் தொடர் அமைதியாக நடக்குமா என்பது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. கடந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க் கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றமே இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications