இரட்டை இலை சின்னத்தில் புதிய தமிழகம் போட்டி!-தமிழரசனுக்கு கே.வி.குப்பம் தொகுதி?
சென்னை: அதிமுக கூட்டணியில் இரு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.
இந்தக் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர் அல்லது வால்பாறை தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரத்தில் போட்டியிடலாம் என்றும் தெரிகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளும் எவை என்பது குறித்து 19ம் தேதி நடைபெறும் புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். தனி சின்னத்தில் போட்டியிடுவதா, அல்லது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதா என்பது பற்றியும் அன்றே முடிவு செய்யப்படும். மேலும்
வேட்பாளர்களும் அன்றே முடிவு செய்யப்படுவர்.
2004ம் ஆண்டு முதல் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்றிருக்கிறது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் திடீர் என்று இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏமாற்று வேலை என்றார்.
இந் நிலையில் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ள இந்தியக்
குடியரசு கட்சிக்கு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அல்லது வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியை ஒதுக்குமாறு அதன் தலைவர் செ.கு.தமிழரசன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.