பிரதமர் இவ்வளவு நல்லவரா இருக்காரே..இவரை எப்படி பாராட்டுவது..!எதிர்க் கட்சிகள்
டெல்லி: கூட்டணி தர்மம் என்ற போர்வையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி செய்வதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று நிருபர்களை பிரதமர் சந்தித்தபோது, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கூட்டணி தர்மத்தை இழுத்து பதில் தந்தார்.
இது குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறுகையில், 2ஜி விவகாரத்தில் கூட்டணி தர்மம் என்ற போர்வையில் ஊழலை மறைக்க பிரதமர் மன்மோகன் சிங் முயற்சி செய்கிறார். 2ஜி ஊழல் விவகாரம்தான் கூட்டணி கட்சி சம்பந்தப்பட்டது என்று ஒரு வாதத்துக் ஏற்றுக்கொண்டாலும் காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் முறைகேடு போன்ற ஊழல்களில் காங்கிரஸ் கட்சியினர் மீதுதான் நேரடியாக புகார் கூறப்பட்டுள்ளது.
குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுத்த ஆத்திரத்தில் தான் மத்திய அரசு மீது பாஜக அடுத்தடுத்து குற்றம்சாட்டி வருகிறது என்ற பிரதமரின் புகார் கேலிக்குரியது. ஊழலைத் தடுக்க முயற்சி எடுக்காததோடு, முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவை காப்பாற்றவும் அவர் மறைமுகமாக முயற்சிக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ராசாதான் முடிவு எடுத்தார் என்று பிரதமர் முதல் முறையாகச் சொல்லி உள்ளார். ஆனால் முறைகேடு நடைபெறாமல் தடுப்பது ஒரு பிரதமரின் கடமை.
ஆனால், ஒரு விஷயத்தில் பிரதமரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். தனது இயலாமையை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது தோல்விகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாக என்னால் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் அவரது நேர்மையை பாராட்டியே ஆக வேண்டும் என்றார் கட்காரி.
சீதாராம் யெச்சூரி...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு இழப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்து பொதுச் சொத்து பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொள்வது போல் உள்ளது. ஆனால், இந்த ஊழலால் ஏற்பட்ட இழப்பை உணவுப் பொருள்கள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கு அளிக்கப்படும் மானியத்தோடு பிரதமர் ஒப்பிட்டுள்ளது வருந்தத்தக்கது.
இது தொடர்பான விசாரணைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் ஆஜராக தயார் என்று சொல்லி உள்ளார். இதை முன்பே சொல்லியிருந்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வீணடிக்கப்பட்டிருக்காது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நாட்டின் வளத்தை தொழிலதிபர்கள் கொள்ளையடித்துள்ளதை பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார். 2ஜி ஒதுக்கீட்டு இழப்பையும் உணவுப் பொருள்களுக்கு மானியம் வழங்கப்படுவதால் ஏற்படும் இழப்பையும் பிரதமர் எப்படி ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் பிரதமரின் இந்தக் கருத்து வியப்பை அளிக்கிறது.
அதேபோல இஸ்ரோ எஸ்-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு புகாரிலும் பிரதமரின் பதில் திருப்தியளிப்பதாக இல்லை என்றார்.
நிதிஷ்குமார்...
பிகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், கூட்டணி கட்சிக்காக ஊழலில் சமரசம் செய்வதை விட பதவியை கைவிட்டு தேர்தலில் மக்களைச் சந்திக்கலாம். சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு கூட்டணி கட்சிகளின் தயவில் ஊழல் ஆட்சி நடத்துவதைவிட தேர்தலைச் சந்திப்பது எவ்வளவோ மேல் என்றார்.












Click it and Unblock the Notifications