நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்: ராசா
நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்று 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறினார்.
ராசாவின் 14 நாள் சிபிஐ காவல் முடிவடைந்ததையடுத்து அவரை மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக வழக்கை விசாரித்த நீதிபதி சைனியிடம் ராசாவின் வழக்கறிஞர் ரமேஷ் குப்தா ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், திகார் சிறையில் ராசாவுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை வழங்க அனுமதிக்க வேண்டும், புத்தகங்களை எடுத்துச் செல்லவும் ராசாவுக்கு அனுமதி தர வேண்டும்.
இந்தக் கோரிக்கையை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு வீட்டு உணவே வழங்கப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து திகார் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய ராசா, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி என்பதை சட்டரீதியாக நிரூபிப்பேன் என்றார்.
ராசா விரைவிலேயே ஜாமீன் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது. ஆனால் ராசாவை முதலில் தனது கஸ்டடியில் எடுத்தபோதே சிபிஐ தனது மனுவில் ராசாவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்ற கோரிக்கையையும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவ்வளவு சீக்கிரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை.
ராசா மீது மார்ச் மாதத்துக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தயார் செய்து தாக்கல் செய்ய முடியுமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
ராசாவிடம் இப்போதைக்கு தற்காலிகமாக விசாரணையை முடித்துள்ள சிபிஐ ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தவுள்ளது.
அந்த வகையில் இந்த நிறுவனங்களுக்கு உதவியாக செயல்பட்ட நிரா ராடியாவும் விரைவில் கைதாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications