மதிமுகவுக்கு எத்தனை இடம்?-அதிமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக மீண்டும் பேச்சு நடத்தியது.
அதிமுக தலைமையகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தைகளில் அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுவினரான முன்னாள் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் மதிமுக தேர்தல் குழுவைச் சேர்ந்த திருப்பூர் மாவட்டச் செயலாளர் மாரியப்பன், காஞ்சீபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு, தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், அதிமுக குழுவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக 2வது முறையாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது. எங்களுடைய நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறோம். எங்களுடைய ஓட்டு மொத்த குறிக்கோள் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். மதிமுகவுக்கு எத்தனைத் தொகுதிகள் என்பதை இரு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்வார்கள். இன்னும் சில கட்சிகள் இந்த அணிக்கு வர உள்ளனர் என்றார்.
முதல்கட்ட பேச்சுவார்த்தியின்போது அதிமுகவிடம் மதிமுக 39 தொகுதிகள் கேட்டதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தக் கட்சிக்கு தேமுதிக வருகிறதா என்பதைப் பொறுத்து அதிமுக இடங்களை ஒதுக்கவுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், 36 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வைகோவுக்கு மிக மிகக் குறைவான ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications