கோத்ரா வழக்கு-குற்றவாளிகளுக்கு மார்ச் 1ம் தேதி தண்டனை அறிவிப்பு
அகமதாபாத்: கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு மார்ச் 1ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள், 63 பேர் நிரபராதிகள் என பிப்ரவரி 22ம் தேதி அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ஆர்.படேல் தீர்ப்பளித்தார். இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் அரசுத் தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்டார். அதன் பின்னர் மார்ச் 1ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து சிறப்பு அரசு வழக்கறிஞர் ஜே.எம்.பன்சால் கூறுகையில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள 31 பேருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என கோரியுள்ளோம். இதுதொடர்பான வாதத்தையும் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications