ராசாவின் உதவியாளர், பல்வாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் உதவியாளர், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் பல்வா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அதிகாரி சித்தார்த் பெகுரியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உசேன் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் சந்தோலியா, சித்தார்த் பெகுரியா, பல்வா ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ தனி நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் சந்தோலியா, பல்வா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதி்ர்ப்புத் தெரிவித்தது.
சிபிஐ தாக்கல் செய்த பதிலில், பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொலைத் தொடர்புத்துறையில் முன் அனுபவமே இல்லாதது. அதற்கு ஸ்பெக்ட்ரம் முறைகேடாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சந்தோலியா மீது முறைகேடான பண பரிமாற்றம் உள்பட பல்வேறு புகார்களுக்கு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சில நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் செயல்பட்டுள்ளார், முன் தேதியிட்டு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதில் அவருக்கு தொடர்பு உள்ளது.
இந் நிலையில் இப்போது இவர்களை ஜாமீனில் விடுவித்தால் விசாரணைக்கு பிரச்சனை ஏற்படும் என்று சிபிஐ கூறியது.
இதையடுத்து இவர்கள் மீதான புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி சைனி, இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications