குட்டக் குட்டக் குனியாமல் சுயமரியாதையுடன் முடிவெடுக்க திமுகவுக்கு வீரமணி அறிவுரை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி சுயமரியாதைக்காரர். இதை எப்போதும் எங்கும் கூறத் தயங்காதவர். துணிவும், கனிவும் ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் ஓயாத சிந்தனையும் செயலாக்கமும் அவரது தனித்தன்மைகள்.
கருவறை துவங்கி கல்லறை வரை, திமுக ஆட்சியால் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பயன் பெறாத மக்களே இல்லை.
கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசரதனிடம் கைகேயி வரம் பெற்றதாக ராமாயணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்டவேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்துவிட்டதுபோல் கற்பனைக் குதிரைகள்மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.
கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது. குட்ட குட்டக் குனியக் கூடாது. எனவே குட்டக் குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.
நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல -கூட்டணி அரசியலில். நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?
எனவே தி.மு.க. சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் பெரும் இழுபறியை ஏற்படுத்து வருகிறது. தமிழக காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை செய்திராத அளவுக்கு அது திமுகவை நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில்தான் காங்கிரஸின் போக்குக்கு பணிந்து போய் விடக் கூடாது என்று மறைமுகமாக கி.வீரமணி கூறியுள்ளார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications