லிபியாவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க இன்று பிரதமரை சந்திக்கும் எம்பிக்கள் குழு
நெல்லை: லிபியாவில் இருக்கும் தமிழர்களை விரைவில் அழைத்து வர தமிழக எம்.பி.க்கள் குழு பிரதமரை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தவிருப்பதாக தங்கவேலு எம்.பி. தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் தலைவன்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 31 பேர் லிபியா நாட்டில் வேலை செய்து வந்தனர். கடந்த 20-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில் தலைவன்கோட்டையைச் சேர்ந்த முருகையா, பாவூர்சத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் பலியானார்கள்.
களப்பாகுளத்தைச் சேர்ந்த முத்துகுமார், கழுகுமலை அருகே உள்ள நாயக்கர் பட்டியைச் சேர்ந்த காசிராஜன் ஆகியோர் படுகாயங்களுடன் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையின் பேரில் லிபியாவில் உள்ள இநதிய தூதர் மணிமேகலை தலைவன்கோட்டையை மட்டுமல்லாது தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று லிபியாவில் இருந்து ஒரு கப்பல் புறப்படுவதாகவும், அதில் தமிழர்கள் உள்பட 1020 பேர் வருவதாகவும் தலைவன்கோட்டையிலுள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே லிபியா துறைமுகத்தில் தமிழர்கள் கடந்த 3 நாட்களாகவே உணவின்றி தவிப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் வேதனையடைந்த தலைவன்கோட்டை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து ராஜ்யசபா எம்.பி. தங்கவேலு, புளியங்குடி டி.எஸ்.பி. ஜமீம், பஞ்சாயத்து தலைவர் பூசபாண்டியன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தினர்.
விரைவில் தலைவன்கோட்டையைச் சேர்ந்த 28 தொழிலாளர்களும், படுகாயம் அடைந்த முத்துகுமாரும் நாடு திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் அங்கு பலியான முருகையா, அசோக்குமார் ஆகியோரது உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் தங்கவேலு எம்பி கூறியதாவது, லிபியாவில் தவித்து வரும் தமிழக பொறியாளர்களை மீட்க சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் எம்.எஸ். கிருஷ்ணாவிடம் தமிழக எம்.பி.க்கள் குழு வலியுறுத்தினோம். இதையடுத்து இரண்டு போர்க்கப்பல்களும், விமானங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தலைவன்கோட்டையைச் சேர்ந்த முத்துகுமார், உள்பட 29 பேரை தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அதே நேரத்தில் பலியான முருகையா, அசோக்குமார் ஆகியோரது உடல்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று டெல்லி சென்று தமிழக எம்பிக்கள் குழு பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தவிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications