ஆட்சியில் பங்கு தராவிட்டால் அரசுக்கு ஆதரவு கிடையாது-இளங்கோவன்
திருவாரூர்: ஆட்சியில் பங்கு தர வேண்டும். அப்படித் தராவிட்டால், திமுக ஆரசை தொடர்ந்து ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய இமை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆட்சியில் பங்கு தராவிட்டால் திமுக அரசுக்கு ஆதரவு கிடையாது என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து திருவாரூரில் காங்கிரஸ் கட்சியினரிடையே அவர் பேசுகையில்,
காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் அளிப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு காங்கிரஸார் 234 தொகுதிகளையும் கேட்கிறார்கள் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான முதல்வரின் இந்தக் கருத்தை காங்கிரஸை கிண்டல் செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இது உண்மையாகக்கூட இருக்கலாம். நாங்கள் 234 தொகுதிகளையும் கேட்கவில்லை. அதில் பாதி அல்லது 110 தொகுதிகள் அளித்தாலும் போதுமானது.
பெரும்பான்மை இல்லாவிட்டாலும், காங்கிரஸ் ஆதரவுடன் 5 ஆண்டுகள் ஆட்சியை திமுக நடத்தியுள்ளது. ஆட்சியில் பங்கு இல்லை. ஆனால், தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் தமிழகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாங்கள் துணை முதல்வர் பதவியோ, அமைச்சர்களில் 50 சதவீத இடமோ கோரவில்லை. மூன்றில் ஒரு பங்காவது அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும்.
இங்குள்ளவர்கள் டெல்லியில் அமைச்சர்களாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் நாங்கள் உங்களுடன் (திமுக) அமைச்சர்களாக இருக்கக் கூடாதா? கூட்டணியில் எத்தனை இடம், அமைச்சரவையில் எத்தனை சதவீதம் என்பதை காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு முடிவு செய்யும்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு ஓரளவுக்கேனும் திருப்தி தரும் வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். நாங்கள் வாக்களிப்போம், யாரோ ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வார்கள். நாம் அடிமைகளாகவே இருப்பதா?
வரவுள்ள ஆட்சியில் நமக்கும் பங்குண்டு என்ற நிலை இருந்தால்தான் காங்கிரஸ்காரர்கள் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் தேர்தல் பணியாற்றுவார்கள். எங்களுக்குப் பணம் தேவையில்லை. கௌரவம், அந்தஸ்து, சுயமரியாதை இவைதான் முக்கியம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications