காங்கிரஸ் சம தர்மம் இனிக்காது, பட்ஜெட்டும் மக்களுக்குப் பயன்படாது-விஜயகாந்த்
சென்னை: எனது ரத்தத்தில் காங்கிரஸும் கலந்திருக்கிறது என்று ஒரு காலத்தில் பேசி வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது, காகிதப்பூ மணக்காது என்று டயலாக் விட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்குப் பயன்படாது என்றும் பேசியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய பட்ஜெட் பாமர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இல்லை. வசதி படைத்தோர் மீது வரி விதித்து, ஏழைகளுக்கு உதவி செய்யும் வகையில் இல்லை. இதற்கு நேர்மாறாக பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் நீடிக்கவே வழிவகை செய்கிறது.
விலைவாசி குறைப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அரசு அறிவித்த பலன் உண்மையான ஏழைகளுக்கு கிடைக்காது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதாயம் அடைவதற்கு இந்த திட்டம் நடைமுறையில் பயன்படும்.
விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்ச ஊழல் போன்ற சமுதாயத்தை சீரழிக்கும் பிரச்சினைகளுக்கு எத்தகைய திட்டமும் அறிவிக்கப்படாமல் மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் நலிவடையச் செய்வதற்கே இந்த பட்ஜெட் பயன்படும்.
காகிதப்பூ மணக்காது, காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது. இந்த நிதிநிலை அறிக்கையும் ஏழைகளுக்கு பயன்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீட் கேட்டு அதிமுகவுடன் முன்பு ரகசியமாகவும், இப்போது வெளிப்படையாகவும் பேரத்தில் ஈடுபட்டுள்ளார் விஜயகாந்த். இந்த நிலையில், அவர், கடைசி நேரத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தனிக் கூட்டணி காணலாம் என்று விஜயகாந்த் குறித்து பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது என்று விஜயகாந்த் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications