பெருந்துறையில் ஜெ. போட்டியிடக் கோரி ஈரோடு சிவபாலன் விண்ணப்பம்
சென்னை: முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு ராஜாவின் பதவி பறி போகக் காரணமாக இருந்த ஈரோடு சிவபாலன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பெருந்துறையில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கல்லாங்குத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. சொத்துக்காக இவரது மனைவி மைதிலி, மகன் சிவபாலன், தம்பி குகமணி ஆகியோரை முன்னாள் அமைச்சர் ராஜாவின் ஆட்கள் கூலிப்படையை வைத்துக் கடத்தியதாக பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்த வழக்கில் ராஜா உள்ளிட்டோர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கு காரணமாக ராஜா பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா, பெருந்துறையில் போட்டியிட வேண்டும் என்று கோரி மைதிலியும், சிவபாலனும், விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேசமயம், சிவபாலனுக்கோ அல்லது மைதிலிக்கோ அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.