காங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை?

Subscribe to Oneindia Tamil

Karunanidhi and Sonia
சென்னை: திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள இடங்கள் போக மீதம் 182 தொகுதிகள் மட்டுமே உள்ளதால், காங்கிரஸ் கட்சிக்கு 50 சீட்களுக்கு மேல் ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்பு சுத்தமாக இல்லை என்று தெரிய வருகிறது.

இந்த 50 என்பது கூட ஒரு யூகம்தான். கடந்த முறை ஒதுக்கப்பட்டது போல 48 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இதனால்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கடும் அதிருப்தியுடன் டெல்லிக்குக் கிளம்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில், காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் சில உதிரிக் கட்சிகள் உள்ளன.

இதில் பாமகவுக்கு 31, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10, கொங்கு நாடுக் கட்சிக்கு 7, முஸ்லீம் லீக்குக்கு 3, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட் என மொத்தம் 52 சீட்களை முடித்து விட்டது திமுக.

இவை போக தற்போது 182 தொகுதிகளே மிச்சம் உள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 132 தொகுதிகளிலும், காங்கிரஸ் 48 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தற்போது 182 தொகுதிகளே திமுக வசம் உள்ளது. இதில் திமுக நிச்சயம் 132 தொகுதிகளுக்குக் கீழ் போட்டியிட வாய்ப்பில்லை. எனவே காங்கிரஸுக்கு மீதமுள்ள 50 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. இது கூட யூகம்தான். திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்தால் இந்த 50 என்பது 48 ஆகக் கூட குறையலாம். அதாவது கடந்த முறை பாமக வாங்கிய அதே 31 தொகுதிகளே இந்த முறையும் ஒதுக்கப்பட்டது போல.

தற்போதைய நிலவரப்படி கட்டக் கடைசியாக காங்கிரஸ் கட்சி வந்து நிற்கிறது. இதனால் அனைவருக்கும் போக எஞ்சிய சீட்களே அதற்குக் கிடைக்கக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் 100 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருந்தது. பின்னர் அதைக் குறைத்து 90 என்றார்கள். தற்போதும் கூட அதே ரேஞ்சில்தான் அவர்கள் பேசி வருவதாக தெரிகிறது. ஆரம்பத்தில் திமுக 65 தொகுதிகள் வரைத் தயாராக இருந்தது. ஆனால் விடாப்பிடியாக 80 தொகுதிகளாவது தர வேண்டும் என்று பேசி வந்தது காங்கிரஸ்.

இந்த இடத்தில்தான் கருணாநிதி தனது பாலிட்டிக்ஸை ஆரம்பித்தார். கொங்கு நாடு கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் என பிற கட்சிகளுக்கு அடுத்தடுத்து சீட்களை ஒதுக்கி, காங்கிரஸை கடும் நெருக்கடிக்கும், எரிச்சலுக்கும் உள்ளாக்கி விட்டார்.

தற்போது மிச்சம் இருக்கிற 50 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என காங்கிரஸிடம் திமுக திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை இதை காங்கிரஸ் ஏற்க மறுத்தால், காங்கிரஸே தேவையில்லை என்ற முடிவுக்கு திமுக வரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸுக்குக் கடுப்பேற்றும் வகையில்தான் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்திற்கு நேற்று திமுக தரப்பில் 7 சீட்களை ஒதுக்கியதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளான தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், பிரபு உள்ளிட்டோர் படு தோல்வி அடைய இந்த கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கட்சியும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்சிக்கு இடத்தை ஒதுக்கிக் கொடுத்து விட்டு அதன் பிறகு குலாம் நபி ஆசாத்துடன் முதல்வர் கருணாநிதி பேச்சுவார்த்தையில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலும் காங்கிரஸ் எரிச்சலடைந்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை. உண்மையான வாக்கு வங்கிகளை வைத்துள்ள கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணையும், திமுகவுக்கென்றே உள்ள விசேஷ வாக்கு வங்கியும், அரசின் மக்கள் நலத் திட்டங்களுமே போதும். ஓசி சவாரி செய்வதற்கு ஏகப்பட்ட பந்தா செய்யும் காங்கிரஸை விட்டு விட்டு தேர்தலை சந்திக்கலாம். தேர்தல் முடிவுக்குப் பின்னர் தேவைப்பட்டால் காங்கிரஸை அணுகலாம் என்று திமுக முன்னணியினர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பது நினைவு கூறத்தக்கது.

எனவே 50 சீட்டா அல்லது கூட்டணியை விட்டு 'கெட் அவுட்'டா என்பதை முடிவு செய்ய வேண்டிய கட்டத்திற்கு தற்போது காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+