தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் பாஜக புகார்!

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி, தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லியில் தேசிய மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து பேசினார்கள்.
அப்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் மனித உரிமையை மீறிய செயல் என்றும், இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி, "கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சுட்டுக் கொல்வதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல் ஆகும். இந்த சம்பவங்கள் கவலை அளிக்கின்றன.
ஆனால் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்த வேண்டும் என்று மனித உரிமை கமிஷன் தலைவரிடம் கேட்டுக் கொண்டோம்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்," என்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன் ராதா கிருஷ்ணனும் அப்போது உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications