அதிமுக கூட்டணி: மதிமுக-18, சிபிஎம்-13, சிபிஐ-10?
நேற்று வந்த விஜயகாந்துக்கு முதல் ஆளாக 41 தொகுதிகளைத் தூக்கிக் கொடுத்து விட்டார் ஜெயலலிதா. மேலும், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளை ஓரம் கட்டி வைத்தார். இதனால் இந்த மூன்று கட்சிகளும் பெரும் கவலையில் ஆழ்ந்தன. காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் இவர்கள் மூவரையும் தள்ளி வைத்திருந்தார் ஜெயலலிதா.
ஆனால் கடைசி நேரத்தில் ஜெயலலிதா நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டன காங்கிரஸும் திமுகவும். இதையடுத்து நேற்று சிபிஎம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிமுக, ஹோட்டலில் வைத்து அவர்களுடன் பேசியது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நேற்று அதுகுறித்து அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், சிபிஐ, மதிமுக ஆகியோரைக் கூப்பிடாமலேயே அவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டையும் அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்று இவை குறித்த முறையான அறிவிப்பை அதிமுக வெளியிடலாம் என்று தெரிகிறது.
அதிமுக தலைமைக் கழக வட்டாரத் தகவல்களின்படி மதிமுகவுக்கு 18, சிபிஎம்முக்கு 13, சிபிஐக்கு 10 தொகுதிகள் என தீர்மானமாகியுள்ளதாம். தொகுதிகள் எவை என்பதும் கூட முடிவாகி விட்டதாம். இன்று அல்லது நாளை கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அதிமுக அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.