சட்டசபைத் தேர்தல் தேதியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்டூ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில் தேர்தலை வைத்திருப்பதற்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் தேதியை மாற்ற முடியாது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறி விட்டார்.
இந்த நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் தேர்வு நேரத்தில் தேர்தலை வைத்திருப்பதால் மாணவர்களின் படிப்பு கெட்டுப் போகும். தேர்வு எழுதுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே தேர்தல் தேதியை மாற்ற உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.