ஹசன் அலியை மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் யோசனை
டெல்லி: கருப்புப் பணத்தை குவித்து வைத்ததாக அமலாக்கப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட ஹசன் அலி கான் மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஏன் விசாரணை நடத்தக் கூடாது என்று மத்திய அரசை கேட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
53 வயதாகும் ஹசன் அலி வெளிநாட்டு வங்கிகளில் பல ஆயிரம் கோடி கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ளது சமீபத்தில் அம்பலமானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து உருப்படியான நடவடிக்கை இல்லை. இதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு நடவடிக்கையில் இறங்கியது. நேற்று ஹசன் அலியை புனேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கிட்டத்தட்ட 6 மணி நேரம் விசாரித்தது அமலாக்கப் பிரிவு. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் கருப்புப் பணம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹசன் அலி குறித்து அமலாக்கப் பிரிவிடமிருந்து அறிக்கை கேட்டது உச்சநீதிமன்றம். இதையடுத்து அமலாக்கப் பிரிவு விசாரணை நிலவர அறிக்கையா தாக்கல் செய்தது.
அதைப் பார்த்த நீதிபதிகள், ஹசன் மீது ஏன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மத்திய அரசு வக்கீலிடம் கேட்டனர்.மேலும், இதை ஏன் சிபிஐ வசம் ஒப்படைக்கக் கூடாது என்றும் கேட்டனர்.
பின்னர், ஹசன் அலி மீதான வழக்கை நேரடியாக கண்காணித்து வர வேண்டும் என்றும், அடுத்த விசாரணை நிலவர அறிக்கையை மார்ச் 18ம்தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பண மோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் ஹசன் அலி மீது சுமத்தப்பட்டுள்ளன.
நேற்று அவரை புனேவில் வைத்துக் கைது செய்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பின்னர் மும்பைக்குக் கொண்டு வந்தனர். இந்தநிலையில், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து ஜேஜ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.












Click it and Unblock the Notifications