12 மாவட்ட திமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்ய நேர்காணல் முடிந்தது
சென்னை: 12 மாவட்டங்களுக்கான நேர்காணலை திமுக நடத்தி முடித்து விட்டது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் திமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் திமுக சார்பில் நேர்காணல் நடந்து வருகிறது. காலையும், மாலையும் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, சேலம், நீலகிரி, திருப்பூர், கோவை மாவட்டங்கங்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது.
நேர்காணலில் சில அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். நேற்றைய நேர்காணலின்போது பிரபல அரவாணி கல்கி கலந்து கொண்டார்.இவர் பொள்ளாச்சி தொகுதிக்கு போட்டியிட சீட் கேட்டுள்ளார். இவருக்கு சீட் கிடைக்கும் என்ற பலமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரவாணிகள் நல வாரியம், அரவாணிகள் தினம் உள்ளிட்ட திமுக அரசின் அறிவிப்பாலும், அரவாணிகளுக்கு தரப்பட்டுள்ள பல்வேறு சலுகைகளாலும் அரவாணிகள் மத்தியில் திமுகவுக்கு நல்ல ஆதரவு காணப்படுகிறது. எனவே கல்கிக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
நேர்காணலைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தொகுதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்களின் பட்டியலை திமுக வெளியிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications