குடிபோதையில் தகராறு செய்த பெண் போலீஸ் கைது!
சென்னை: சென்னையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் ராணி (38). திருமணமாகாத இவர், மைலாப்பூர் அப்பு தெருவில் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார்.
நேற்று முன்தினம் தலைமைச் செயலக காவல் பணியில் இருந்த ராணி மாலை 3 மணியளவில் பணி முடிந்து விடுதிக்குச் சென்றார். மாலை 6 மணிக்கு மீண்டும் இரவு பணிக்காக புறப்பட்டு வந்தவர் ஐஸ் ஹவுஸ் மார்க்கெட்டில் உள்ள காமாட்சி ஹாட் சிப்ஸ்' என்ற பேக்கரிக்குச் சென்றார்.
பிஸ்கட், கேக், சிப்ஸ் என வேண்டியதை வாங்கிக் கொண்டு பணம் தராமல் சென்றார். இதையடுத்து அவரைத் தடுத்த கடை ஊழியரான தமிழரசன் என்பபவரை ராணி தாக்கினார்.
இதையடுத்து அக்கம் பக்கம் உள்ள கடைக்காரர்கள் ராணியைப் பிடித்து ஐஸ் ஹவுஸ் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது ராணி குடிபோதையில் இருந்தது தெரிய வந்ததால் உடனடியாக இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராணி மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். ராணியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர் மது அருந்தியதற்கான சான்றிதழை போலீசார் வாங்கினர்.
பின்னர் ராணி மீது குடிபோதையில் பொது இடத்தில் ரகளை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ராணியின் செயல் குறித்து விசாரணை நடத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ராணி போதையில் ரகளை செய்வது இது புதிதல்ல. அவர் ஏற்கனவே கரூரில் வேலை பார்க்கும் போதும், அதன் பிறகு கோவையில் வேலை பார்க்கும் போதும் போதை புகாரில் சிக்கியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் பணி மாறுதலாகி அவர் சென்னை வந்தார். சென்னையிலும் அவரது பழைய போதை பழக்க வழக்கம் தொடர்ந்தது.
மருத்துவ விடுமுறையில் சென்றிருந்த அவர், சமீபத்தில் தான் மீண்டும் பணியில் வந்து சேர்ந்தார் என்றார்.
இந் நிலையில் ராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.