ஆட்டோ பெர்மிட் நிறுத்தி வைப்பு-தேர்தல் ஆணையம் உத்தரவு
நெல்லை: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பயணிகள் ஆட்டோவுக்கு பெர்மிட் வழங்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசின் இலவச திட்டங்கள், நலத்திட்டங்கள், இலவச மருத்துவ முகாம் போன்றவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ரேஷன் கார்டு வழங்குவது, பட்டா வழங்குவது, தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது, மகளிர் குழுவுக்கு கடன் வழங்குவது, மகளிர் குழு செயல்படுவது ஆகியவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் பயணிகள் செல்லும் புதிய ஆட்டோவுக்கும் பெர்மிட் வழங்க வேண்டாம் என அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் புதிய ஆட்டோ வாங்க புக்கிங் செய்த ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் கோடிக் கணக்கில் முதலீடு செய்து ஆட்டோ வாங்கி வைத்துள்ள டீலர்களும் விற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது,
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். முன்பு புதிய ஆட்டோ வாங்க வேண்டுமானால் பணம் கட்டி 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது பணம் கட்டியதும் ஆட்டோ டெலிவரி செய்யும் நிலை உள்ளது. ஆனால் தற்போது புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் டுரீஸ்ட் கார்களுக்கு பெர்மிட் வழங்குவது நிறுத்தப்படவில்லை. இதனால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுவர். எனவே ஆட்டோவுக்கு பெர்மிட் வழங்குவதை நிறுத்தி வைத்து பிறப்பித்துள்ள உத்தரவை மறு பரீசிலனை செய்யக் கோரி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications