டெல்லி கல்லூரி மாணவி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது
டெல்லி: டெல்லியில் கல்லூரி மாணவி ராதிகா தன்வரை சுட்டுக் கொன்ற வழக்கின் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று மும்பையில் வைத்து கைது செய்தனர்.
தெற்கு டெல்லி தௌலா குவானில் உள்ள சாந்திநிகேதன் பகுதியில் ராம்லால் ஆனந்த் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ராதிகா தன்வர்(20). கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த ராதிகா கல்லூரி அருகிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
பட்டப்பகலில் ஜனநடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒரு கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்டது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையை நேரில் பார்த்தவர்கள் பலர் என்றாலும், சாட்சி சொல்ல யாருமே முன் வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ராம் சிங் (எ) விஜய் ( 25 ) என்பவனை போலீசார் மும்பையில் வைத்து இன்று கைது செய்தனர். ஏற்கனவே அவனின் நண்பர்கள் தப்ரெஸ் மற்றும் அஷ்ரப் ஆகியோரை உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சீதாபூரில் வைத்து கைது செய்தனர். ராதிகா இறந்த இரண்டாவது நாள் விஜய் டெல்லியில் இருந்து வெளியேற அவனது நண்பர்கள் தான் உதவி செய்துள்ளனர்.