சட்டசபை தேர்தல்: வில்லிவாக்கத்தில் அன்பழகன் போட்டி? அண்ணாநகரில் திருநாவுக்கரசர்?
வரும் தேர்தலில் பல அரசியல் தலைவர்கள் தாங்கள் வழக்கமாக போட்டியிடும் தொகுதிகளை விட்டுவிட்டு புதிய தொகுதிகளில் நிற்கின்றனர். அந்த பட்டியலில் திமுக பொருளாளர் க. அன்பழகனும் சேருவார் என்று தெரிகிறது. அவர் கடந்த தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை வில்லிவாக்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த தேர்தலில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்த தேர்தலில் போடியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அண்ணாநகரில் போட்டியிடலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
திருநாவுக்கரசர் அண்ணாநகரில் தான் வசித்து வருகிறார். அவர் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். எனவே, திருநாவுக்கரசருக்கு அண்ணாநகர் தொகுதியை பெற்றுத் தர ப.சிதம்பரம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அண்ணா நகர் நீண்ட காலமாக திமுக தொகுதியாக இருந்து வந்தது. தற்போது முதன் முறையாக கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படவிருக்கிறது.