மதுரை தொகுதிகளை கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்
மதுரை: மதுரையில் உள்ள சட்டசபைத் தொகுதிகளில் பெருமளவில் பணம் புழங்கும் என்று தகவல் கிடைத்துள்ளதால் அங்குள்ள அனைத்துத் தொகுதிகளையும் தேர்தல் அதிகாரிகளும், பார்வையாளர்களும் கண் கொத்திப் பாம்பாய் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாம்.
தமிழகத்தில் பெருமளவில் பணம் பாயும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதிகளைப் பட்டியல் போட்டு கையில் எடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இங்கெல்லாம் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அது அறிவுறுத்தியுள்ளது.
இந்த பணக்கார தொகுதிகள் பட்டியலில் மதுரையும் அடக்கம். மதுரையில் உள்ள மதுரை மேற்கு, மத்தி, கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய நகர்ப்புற தொகுதிகளில்தான் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இது போக பணப் புழக்கத்திற்குப் பெரும் பெயர் பெற்ற திருமங்கலம் மற்றும் மேலூர் தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலில் பெருமளவில் பணம் பாதாளம் வரை பாய்ந்ததாக அப்போது பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த திருமங்கலம் பார்முலாவை வருகிற தேர்தலின்போது மதுரை தொகுதிகளிலும் பயன்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால்தான் தீவிர கண்காணிப்புக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாம்.
எந்த மார்க்கத்திலும் பணம் வாக்காளர்களுக்குப் போகக் கூடாது என்பதில் தேர்தல் ஆணையம் கவனமாக உள்ளதாம்.
இங்கு சட்டம் ஒழுங்கைக் கண்காணித்து கட்டுக்குள் வைத்திருக்கும் வழியாக, ஜார்க்கண்ட் மாநில கூடுதல் டிஜிபியான டி.கே.பாண்டே கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் விதி மீறல்களைக் கண்காணித்துத் தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் செய்யும் செலவுகளைக் கண்காணிக்கவும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் வரும் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, சோழவந்தான் தொகுதிகளுக்கு மோகனராவ், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, திருமங்கலம் தொகுதிகளுக்கு வி.வி. ஷிண்டே, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு தொகுதிகளுக்கு தினேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை ஒன்று விடாமல் கணக்கெடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வருகிறார்கள்.