இன்று மதிமுக உயர் மட்டக் கூட்டம்-அதிமுகவுடன் கூட்டணியா..பிரிவா?-வைகோ ஆலோசனை
சென்னை: 16 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என்று அதிமுக தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள சமரசத் திட்டத்தை மதிமுக ஏற்குமா என்பது இன்று மாலை நடைபெறும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின்னர் தெரிய வரும்.
அதிமுக கூட்டணியில் பெரும் கேவலத்திற்கு ஆளானவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
மதிமுகவுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காமல் தன்னிச்சையாக தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்தார் ஜெயலலிதா. இதனால் கொந்தளித்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரண்டு 3வது அணி அமைக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததும் அதிர்ச்சியில் இறங்கி வந்தார் ஜெயலலிதா. தற்போது இக்கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கி முடித்துள்ளார். தேமுதிக மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.
மீண்டும் அதிமுக கூட்டணியில் தொடர இந்தக் கட்சிகள் முடிவு செய்த போதிலும், மதிமுகவுக்கும் கெளரவமான இட ஒதுக்கீட்டை தர வேண்டும் என்று அதிமுகவை வலியுறுத்தியுள்ளன.
இதையடுத்து தற்போது ஜெயலலிதாவும் சற்று இறங்கி வந்துள்ளார். 16 சீட்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்று அவர் மதிமுக தரப்புக்குத் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து இன்று காலை நடந்த மதிமுக உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ ஆலோசனை நடத்தினார்.
எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் இன்று காலை நடந்த இக் கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மதிமுக மூத்த தலைவர்களிடம், வைகோ அதிமுகவிடம் குறைந்தபட்சம் எத்தனை தொகுதிகளுக்கு உடன்படலாம் என்பது குறித்து விவாதித்தார்.
இந்த கூட்டத்தில் பொருளாளர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத், கணேசமூர்த்தி, பாலவாக்கம் சோமு, டி. ஆர்.ஆர்.செங்குட்டுவன், துரைபாலகிருஷ்ணன், நாசரேத் துரை, ரத்தினராஜ், செந்தில் அதிபன், இமயம் ஜெபராஜ் உள்பட 13 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இதில் எடுக்கப்படும் முடிவுகளை இன்று மாலையில் நடைபெற்று வரும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வைகோ ஆலோசித்துக் கொண்டுள்ளார். இரவு வரை தொடரவுள்ள இக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
முதலில் 35 தொகுதிகளைக் கேட்டார் வைகோ. அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயலலிதா பிடிவாதமாக கூறவே 25 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டார். ஆனால் ஜெயலலிதாவோ 8 அல்லது 9க்கு மேல் கிடையாது என்று கூறி விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ, கடைசியாக 21 தொகுதிகள் கொடுத்தால் பேசலாம், இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறி விட்டார். அந்த நிலையிலிருந்து அவர் மாறவும் இல்லை.
இந்த நிலையில்தான் ஆணவத்துடன் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்து ஒட்டுமொத்த கூட்டணிக் கட்சிகளின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளானார். ஊரெங்கும் கொடும்பாவிகளை எரிக்க ஆரம்பித்தனர் தோழமைக் கட்சியினர். அதன் பின்னரே அவர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்தார். தனது முதல்வர் கனவுக்கு ஆப்பு வைக்க அனைவரும் தயாராகி விட்டதைப் பார்த்த பின்னரே, இறங்கி வந்தார், கூட்டணிக் கட்சிகளுடன் பேசினார்.
தற்போது மதிமுகவின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து வைகோவுடனும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனை அனுப்பி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
அவசரப்பட்டு முடிவெடுத்துவிட வேண்டாம், அம்மா விட்டுத் தருவார்கள் என்று வைகோவிடம் இவர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 6 சதவீத வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications