ஜாதிக் கட்சிகள், அமைப்புகளின் ஆதிக்கம்-அரசியல் கட்சிகள் கலக்கம்
நெல்லை: ஜாதி கட்சிகள், அமைப்புகளின் வேட்பாளர்கள் சட்டசபை தேர்தல் களத்தை அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளதால், குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் களம் இறங்கியிருப்பதால், அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன.
அரசியலும், ஜாதி அமைப்புகளும் பிரிக்க முடியாதவை. ஜாதிக்கு எதிரானவர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று என்னதான் அரசியல் கட்சிகள் முழங்கினாலும், மதச்சார்பற்ரவை என்று வாய் கிழியப் பேசினாலும்,தேர்தல் என்று வந்து விட்டால் இதற்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
இந்த வகையில் இப்போதெல்லாம் பச்சையாகவே ஒவ்வொரு ஜாதிக்கும் என்று தனித் தனியாக கட்சிகள் வந்து விட்டன. வன்னியர்களா இருக்கிறது பாமக, கவுண்டர்களா வந்து விட்டது கொமுக என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு ஜாதிக்கும் கட்சிகள் வந்து விட்டன.
சொந்த ஜாதி மக்களுக்காக மட்டும் குரல் கொடுத்து போராட்டங்களை, இயக்கங்களை நடத்தி தங்களை வளர்த்து கொண்ட பின் புதிய பெயர், செயல்திட்டத்துடன் அரசியல் அரங்கில் தோன்றி கூட்டணி கட்சிகள் பலத்தில் வெற்றி பெற்று எம்பி, எம்எல்ஏக்களை கட்சிகள் பெற்றுள்ளன.
இதே திட்டத்தில் பல அமைப்புகள் தற்போதும் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய சட்டசபை தேர்தல் காலம் ஜாதி அமைப்புகளுக்கு கொண்டாடமாகி விட்டது.
இப்படி ஜாதி அமைப்புகள் புற்றீசல் போல கிளம்பி வருவதால், முக்கிய அரசியல் கட்சிகள் குழப்பமடைந்துள்ளன. இவர்களால் தங்களது வாக்கு வங்கிக்கு பாதகம் வருமோ என்ற பயமே அதற்குக் காரணம்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இந்திய ஜனநாயக கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, அழகுமுத்துகோன் பேரவை, வாணியர் பேரவை, வஉசி பேரவை, சமுக சமத்துவபடை, தமிழக மக்கள் முன்னேற்றகழகம் உள்ளிட்ட அமைப்புகள் தத்தம் சமுதாய ஓட்டுகளை தங்கள் அணி, அமைப்புகளுக்கு திரட்ட முயற்சி செய்து வருகின்றன.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் சிலர் கூறும்போது, தேர்தலில் ஆளும் கட்சி, எதிர் கட்சி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் கட்சிகள் வெற்றி வாய்ப்பை இழந்தன. இந்த தேர்தலிலும் சமுதாய ரீதியாக கணிசான ஓட்டுகள் பிரிகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications