கெடு விதித்து காங்கிரஸை பணிய வைத்த மம்தா பானர்ஜி!
டெல்லி: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் விதித்த நிபந்தனைகளையும், கொடுத்த தொகுதிகளையும் ஏற்றுக் கொண்டு வாய் பொத்தி நிற்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்துடன் சேர்த்து மேற்கு வங்க சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ்-திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் காங்கிரஸ் 120 தொகுதிகளைக் கோரியது. ஆனால், 45 சீட்கள் மட்டுமே தர முடியும் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறிவிட்டார்.
ஆனால், அதை ஏற்க அகில இந்திய காங்கிரஸ் பொதுச் ராகுல் காந்தி அண்ட் கோ மறுத்தது. 90 சீட்டாவது வேண்டும் என்று தமிழகத்தில் திமுகவிடம் செய்த அரசியலை ராகுல் செய்து பார்த்தார். மம்தாவிடம் இந்த பாச்சா பலிக்காததால் 80 வேண்டும், ஏழுபது சீட்டாவது வேண்டும் என்று காங்கிரஸ் தனது வேலையைக் காட்டியது.
ஆனால், காங்கிரசின் ஓவர் ஆட்டத்தால் பொறுமை இழந்த மம்தா, கடந்த சனிக்கிழமை 228 தொகுதிகளில் தனது கட்சி போட்டியிடும் என்றும் 65 தொகுதிகளை மட்டுமே காங்கிரசுக்குத் தர முடியும் என்று அறிவித்ததோடு, இதை காங்கிரஸ் தி்ங்கள்கிழமை (நேற்று) 4 மணிக்குள் ஏற்க வேண்டும் என்று கெடு விதித்தார்.
ஆனால் நேற்று மாலை 3.45 மணி வரை காங்கிரஸ் வாய் திறக்காமல் அமைதி காத்தது. இந் நிலையில் மாலை 4 மணிக்கு மம்தா கொல்கத்தாவில் நிருபர்களை சந்திக்க, 3.58 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமத் டெல்லியில் நிருபர்களை சந்தித்து மம்தா கொடுத்த 65 தொகுதிகளை ஏற்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications