பணப்பட்டுவாடா விவகாரம் - 108 ஆம்புலன்ஸை சோதிக்க வேண்டும் - பா.ஜ.க. கோரிக்கை !
மதுரை: திமுகவின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க, 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளை தேர்தல் அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பிஜேபி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தி.மு.க. தலைவர் கருணாநிதி வாகன சோதனை செய்து பொது மக்களையும் வியாபாரிகளையும் அவதிக்குள்ளாக்குவதாக அறிக்கை விடுத்துள்ளார்.
பொது மக்களும் வியாபாரிகளும் கொண்டு செல்லும் பணத்திற்கு ஆவணம் கேட்டு அதிகாரிகள் அவர்களை துன்புறுத்த வேண்டாம் என பாரதீய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.
கருணாநிதியும் ஆளும் கட்சியும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தவறாக பயன்படுத்தி வாக்காளர்களுக்கான ஒருசில அதிகாரிகள் துணையோடு பண பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல் பரவியுளளது.
அதுமட்டுமின்றி ஏற்கனவே அரசின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்ட மின்வெட்டை பயன்படுத்தியும், மேலும் வேண்டும் என்றே மின்வெட்டை ஏற்படுத்தியும் இருளில் தமிழகம் மூழ்கியுள்ள நேரத்தில் வாக்குகளை கவர பணமும், இலவச பொருட்களும் கடத்தப்படுகிறது.
எனவே தேர்தல் கமிஷன் 108 ஆம்புலன்ஸ் வண்டிகளை முழுவதுமாக சோதிக்க வேண்டும் என்றும், மின்வெட்டை உடனடியாக தேர்தல் முடியும் வரையாவது நீக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications