கருணாநிதி வாக்குறுதியையடுத்து திமுகவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு
சென்னை: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக முதல்வர் கருணாநிதி வாக்குறுதியளித்ததையடுத்து வரும் தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உள்பட நிர்வாகிகள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தாங்கள் ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் ஜெய்னுலாபுதீன் நிருபர்களிடம் கூறியதாவது,
கல்வி, வேலைவாய்ப்பில் அடித்தட்டு முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் தனி இடஒதுக்கீடு தேவை என்ற அடிப்படையில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆட்சியில் பெற்றோம்.
இது போதுமானதாக இல்லை என்பதால் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் வெளியிடும் கட்சியைத் தான் ஆதரிப்பது என்று தீர்மானித்தோம்.
இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக அதிமுக தலைமை எங்களை 5 முறை தொடர்பு கொண்டு கூறினர். எங்கள் அலுவலகத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடம் இந்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் தான் இந்த இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வெளியிட்டிருக்கிறார்கள். அதிமுக எதுவும் கூறாமலே சென்றுவிட்டது. தேர்தல் அறிக்கையில் வெளியிடாமல் வெறுமனே பிரசாரங்களில் சொல்வதையெல்லாம் நாங்கள் உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.
அந்த அடிப்படையி்ல் தான் திமுகவை ஆதரிப்பது என்று எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவெடுத்திருந்தோம். அந்த முடிவினை முதல்வர் கருணாநிதியை சந்தித்து தெரிவித்தோம். பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு தரவேண்டும் என்றும் நாங்கள் அவரிடம் வலியுறுத்தினோம் என்றார்.