தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை நீக்கக்கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி அக்கட்யினர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
சட்டசபை தேர்லுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் ஏற்பட்ட அத்தனை குழப்பங்களுக்கும் காரணமான கே.வி.தங்கபாலுவை உடனே கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தென்சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மயிலை சி.பெரியசாமி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா ஆகியோர் தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தில் அமெரிக்க நாராயணன், மகிளா காங்கிரஸ் துணை தலைவி சாந்தி, மத்திய சென்னை இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் குமார், டாக்டர் அமீர்ஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலை சி.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் கிடைத்துள்ளது. ஆகவே அத்தனை தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டிய நிலை தலைமைக்கு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் வெற்றிபெற வேண்டும்.
அவர் தனது தொகுதி வேலைகளையும் கவனித்துக் கொண்டு, கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்ய வேண்டும். இந்த இரண்டு வேலைகளையும் அவரால் செய்ய முடியாது. அதனால் வேறொருவரை தலைவராக்க வேண்டும். அதற்கு தலைமை தங்கபாலுவை தலைவர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.
எஸ்.எம்.இதயத்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் செயல்களால் கட்சியினர் கொதித்துப்போய் உள்ளனர். அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி உண்ணாவிரதம் இருக்கிறோம். மைலாப்பூர் தொகுதியில் திட்டமிட்டு காங்கிரசுக்கு தவறான தகவல்களைக் கொடுத்து தானே வேட்பாளராகிவிட்டார். கிருஷ்ணகிரியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். போராடி பெற்ற ஒரு காங்கிரஸ் தொகுதியும் போய்விட்டது.
இது மட்டுமின்றி குளச்சல், மணப்பாறை, திரு.வி.க.நகர் போன்ற பல தொகுதிகளிலும் குழப்பத்தை உண்டாக்கி காங்கிரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளார். மகளிருக்கு கிடைக்கவேண்டிய இரண்டு சீட்டுகளை இழந்துள்ளதற்கு தமிழக காங்கிரஸ் தலைமை காரணமாக இருந்துள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை நண்பர் என்று கூறியவரை வேட்பாளராக்கியதன் மூலம் மீனவர்கள் காங்கிரஸுக்கு எதிராக திரும்பியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினருக்கு கொடுக்கவேண்டிய 4 சீட்டுகளை கொடுக்காமல், இரண்டு சீட்டுகளை மட்டும் கொடுத்து, அதிலும் கிருஷ்ணகிரி தொகுதியில் ஒரு சீட்டை இழந்துவிட்டோம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ரவுடித்தனம் செய்யும் வகையிலும் சிலரை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து அலுவலகத்தின் உள்ளே வைத்துள்ளனர். எனவே தங்கபாலுவை நீக்கும்வரை போராடுவோம் என்றார்.
உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது தங்கபாலு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அலுவலகத்திற்குள் வருமாறு அழைத்தார். ஆனால் அவர் அழைப்பை ஏற்க கட்சியினர் மறுத்துவிட்டனர். பின்னர் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியை போனில் தொடர்பு கொண்டபோது அவர் கட்சியினரின் கோரிக்கை மனுவை மற்றொரு தமிழக பொறுப்பாளர் சாந்தாராம் நாயக்கிடம் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் மதியம் 3.30 மணிக்கு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications