சுயேச்சைகளுக்கு முரசு, மெழுகுவர்த்தி சின்னங்கள்: தேர்தல் அதிகாரி அமுதா விளக்கம்
சென்னை: தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாத இடங்களில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு முரசு, மெழுகுவர்த்தி சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சின்னத்தில் ஒருவர் தான் போட்டியிடலாம் என்று தேர்தல் விதி சொல்லவில்லை என்று தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா தெரிவித்தார்.
வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 773 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நேற்று சென்னை பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக்ததில் வேட்பாளர்கள் பட்டியலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களும் சரிபார்க்கப்பட்டன. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொட்டும் முரசு சின்னமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி்க்கு கொடுக்கப்பட்டுள்ள மெழுவர்த்தி சின்னமும் அவ்விரு கட்சிகள் போட்டியிடாத இடங்களில் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா கூறியதாவது,
ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 10 சதவீத தொகுதியில் போட்டியிடுபவர்களுக்குதான் பொது சின்னம் கொடுக்க முடியும். உதாரணமாக தேமுதிக பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். அதற்கு கொட்டும் முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேமுதிக போட்டியிடாத இடங்களில் கட்சி வேட்பாளரோ அல்லது சுயேட்சையோ முரசு சின்னத்தை கேட்டால் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அந்த சின்னம் கொடுக்கப்படும்.
அதேசமயம் பதிவு செய்யப்படாத இரு கட்சிகள் அல்லது சுயேச்சைகள் ஒரே சின்னத்தை கேட்டார்கள் என்றால் உதாரணமாக மெழுகுவர்த்தி சின்னம் கேட்டால், 2 வேட்பாளர்களின் பெயர்களையும் சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும்.
தேமுதிகவுக்கு முரசு சின்னம் கொடுத்துள்ளதால் வேறு தொகுதியில் போட்டியிடும் யாருக்கும் அந்த சின்னம் கொடுக்கக்கூடாது என்று தேர்தல் விதி சொல்லவில்லை. அவர்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும். இப்படித் தான் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications