கருத்து கணிப்புகளை பார்த்து கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-விஜயகாந்த்
திருப்பூர்: என்னைச் சமாளிக்க முடியாமல் கண்டபடி தப்பான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இதனாலெல்லாம் என் புகழ் மங்காது. மேலும் வளரத்தான் செய்யும், என்றார் விஜயகாந்த்.
திருப்பூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், "சாய, சலவைப்பட்டறை பிரச்சினையால் திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணவில்லை.
சாயப் பட்டறைகளுக்கு ரூ.300 கோடி மானியமாக கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் அந்த மானியம் இதுவரை முறையாக சென்று சேரவில்லை. இப்போது தேர்தல் வந்ததும் சாயக் கழிவுநீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக கருணாநிதி கூறுகிறார். இது ஏமாற்று வேலை என்பதை மக்கள் உணர வேண்டும்.
தவறு செய்தால் எனக்கு கோபம் வரும். பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் அடம் பிடித்தால் தாய் அந்த குழந்தையை அடிக்கமாட்டாரா? தவறு செய்பவர்களைக் கண்டித்தேன். அதை பெரிதுபடுத்தி விளம்பரம் தேடுகிறார்கள்.
இந்த விஜயகாந்தை சமாளிக்க முடியாமல் ஏதேதோ பரப்பி வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் எனது புகழ் கூடத்தான் செய்யும். அதைப் பற்றி கவலைப்படுபவன் நான் அல்ல. பணத்துக்கு ஆசைப்பட்டு இருந்தால் நான் எங்கோ சென்றிருப்பேன்.
என் மானசீக குரு எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியுடன் நான் இப்போது கூட்டணி வைத்துள்ளேன். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதல்வர். இதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்," என்றார்.
முன்னதாக பழனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பழனி பஸ் நிலையம் ரவுண்டானா முன் விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார். அவர் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகளை லயோலா கல்லூரி, மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கருத்து கணிப்புகளை பார்த்த கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அந்த கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 45 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 41 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆங்கில தனியார் தொலைக்காட்சிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு 164 முதல் 180 இடங்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 58 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. தமிழகத்தில் தற்போது குடும்ப அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வருகிற தேர்தலில் தி.மு.கவுக்கு வாக்களிக்க கூடாது.
கடந்த சில நாட்களாக நான் தப்பு செய்வதாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. இது தவறானது. கருணாநிதி தனது குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இது தமிழ்நாடா? அல்லது கலைஞர் வீடா? என்பதை வரும் 13ம் தேதி மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications