தென்னக நதிகள் இணைக்கப்படும்... காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. வேட்பாளர் அறிவிப்பைப் போலவே, தேர்தல் அறிக்கையையும் கடைசியாக வெளியிட்டுள்ளது இந்தக் கட்சி.
இந்த தேர்தல் அறிக்கையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று வெளியிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பெற்றுக் கொண்டார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
சேது சமுத்திர திட்டம்
சேது சமுத்திர திட்டம் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால் பாரதீய ஜனதா கட்சியினர் ராமர் பாலம் இருப்பதாக பிரச்சினையை எழுப்பி உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடந்து வருவதால் இத்திட்டத்தை நிறைவேற்றுவது நிலுவையில் உள்ளது.
தி.மு.க. கூட்டணி அரசு அமைந்தால் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்னக நதி நீர் இணைப்பு
தென்னக நதிகள் இணைக்கப்படுமானால் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் பற்றாக் குறை பெருமளவு குறையும். தேர்தல் முடிந்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைந்தால் தென்னக நதிகள் இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் வலியுறுத்தும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்களுக்கு மாறியவர்களுக்கும் பட்டியலின மக்களுக்கும் உள்ள உரிமைகளை தாமதமின்றி வழங்க காங்கிரஸ் வலியுறுத்தும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் நடக்க காங்கிரஸ் துணை நிற்கும்.
தென்னை-பனை தொழிலாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.
நுழைவுத் தேர்வு ரத்து
ஏழை-எளிய பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தடைகளை நிக்கும் வண்ணம் நுழைவுத்தேர்வு முறை கட்டாயமாக ரத்து செய்யப்படும்.
எல்லா மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டு ஏழை-எளிய கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி சேவை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகள் இல்லை. இதனால் பள்ளி கல்வியில் மத்திய அரசின் ரூ.1000 கோடி முதலீட்டை தொடர்ந்து தமிழகம் இழந்து வருகிறது.
எனவே இங்கு நவோதயா பள்ளிகள் இயங்க காங்கிரஸ் வலியுறுத்தும். 8-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை இலவச கம்ப்யூட்டர் கல்வி கற்று கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
ராமநாதபுரத்துக்கு ஸ்பெஷல் கவனிப்பு
சிறிய கிராமங்களில் மருத்துவ வசதிக்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தோடு இணைக்க வலியுறுத்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் போக்குவரத்து வசதியில் மிகவும் பின்தங்கி உள்ளது. அங்கு புதிய போக்குவரத்து மண்டலம் ஏற்படுத்த காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்.
கடல் அலைகள் அதிக முள்ள வங்கக்கடலில் அலைகளை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளும். குப்பைகளை பயன்படுத்தி சிறுமின் உற்பத்தி நிலையங்கள் தனியார் துறை மூலம் அமைக்க ஊக்கம் தரப்படும்.
பெண்போலீசாரைப் பாதுகாக்க
மேல் அதிகாரிகளின் தொந்தரவுகளில் இருந்து பெண் போலீசாரை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் நிலையங்களில் தவறுகள் நடக்காமல் இருக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் உயர் பதவி பெற்று ஓய்வு பெற்ற அலுவலர்கள் உள்ளடக்கிய மேற்பார்வை குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை அவசரகால நடவடிக்கையாக கருதி தேவையான நிதி ஒதுக்கி நிறைவேற்றப்படும்.
ரேசன் கடைகளில் பொருட்கள் கடத்தல், போலி குடும்ப அட்டைகள், போலியாக பெயர்கள் சேர்த்தல் போன்றவை மலிந்துள்ளன. இந்த சீர்கேடுகளை களைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் பணியாளர் பதவி நிரந்தரம்
டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பதவி நிரந்தரமும் ஊதிய உயர்வும் கிடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்யும். 108 ஆம்புலன்ஸ் எண்ணிக் கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
நாடு முழுவதும் அடையாள அட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் வழங்கி மக்கள் அரசின் திட்டங்களை முழுமையாகப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இரு மாநிலங்களுக்கு இடையே நட்புறவு பாதிக்கப்படாமல் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications