ஜெயலலிதாவின் மூல நோக்கம் திராவிட இயக்கத்தை வீழ்த்துவது தான்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
விழுப்புரம்: என்னைப் பற்றி ஜெயலலிதா ஆதரவு பத்திரிக்கைகள் எழுதுகின்ற செய்திகள், எழுதுகின்ற கதைகள், என்னைப்பற்றி செய்கின்ற பிரச்சாரங்கள் இவைகள் எல்லாம் என்னை எதுவும் செய்து விடவில்லை. நான் அதற்கு மாறாக வளர்ந்து கொண்டே இருக்கிறேன். அவர்கள் வசைபாடட்டும், வசைபாடட்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

விழுப்புரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், எத்தனை எத்தனை தோழர்கள், எத்தனை எத்தனை இளைஞர்கள், எத்தனை எத்தனை முதியவர்கள் வளர்த்த இயக்கம் இந்த இயக்கம்.

எனது அருமை நண்பர் திருமாவளவன் இங்கு பேசும்போது, எதிர்க்கட்சி தலைவரை பார்த்து உங்களுக்கு அதுதெரியுமா, இது தெரியுமா என்றெல்லாம் கேட்டார். சரித்திரம் தெரியுமா என்று கேட்டார். திராவிட இயக்கத்தின் மூலம் தெரியுமா, திராவிட இயக்கத்தை யார், யார் வளர்த்தார்கள் என்று தெரியுமா, இதற்கெல்லாம் ஒரே பதில் 'திராவிட இயக்கம் என்றால் என்ன'? என்பதை யாரை பார்த்து கேட்டாரோ அவரிடம் இருந்து பதில் வந்திருந்தால் நான் ஆச்சரியப்பட தேவையில்லை.

திராவிட இயக்கத்தை அழிக்க இன்றைக்கு கொடுவாள் எடுத்து புறப்பட்டிருக்கிறார் ஒரு அம்மையார். திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன், பெரியார் உருவாக்கிய சுயமரியாதையை, அண்ணா உருவாக்கிய லட்சிய தாகத்தை அந்த கொடுமைகளை எல்லாம் அறவே புரட்டிப்போட்டு இந்த இயக்கத்தை அழிப்பது தான் எனது வேலை என்று புறப்பட்டிருக்கிறார். அந்த அம்மையார் உங்களிடத்தில் ஆதரவு கேட்பது எதற்கு, ஆட்சி செய்வதற்காக அல்ல. இந்த ராஜ்ஜியத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல, அவருடைய மூல நோக்கம் திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான்.

அந்த நோக்கத்துக்கு ஆதரவாக பெரும்படை, பத்திரிகை படை அவரிடத்திலே இருக்கிறது. அந்த படையை நாம் ஒன்றும் செய்வதற்கு இல்லை. காரணம். ஜனநாயகத்தில் பத்திரிகை சுதந்திரத்தை என்றைக்கும் நாம் கட்டுப்படுத்துவது இல்லை. பத்திரிகை சுதந்திரத்தை நாம் வளர்த்தோமே தவிர, அதை வதைத்தவர்கள் அல்ல. அந்த சுதந்திரம் இருக்கிறது என்ற ஒரே காரத்தினால் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். எந்த செய்தியை வேண்டுமானாலும் போடுகிறார்கள்.

இங்கே தம்பி திருமா கேட்டதைப்போல், என்னைப் பற்றி அவர்கள் எழுதுகின்ற செய்திகள், எழுதுகின்ற கதைகள், என்னைப்பற்றி செய்கின்ற பிரச்சாரங்கள் இவைகள் எல்லாம் என்னை எதுவும் செய்து விடவில்லை. நான் அதற்கு மாறாக வளர்ந்து கொண்டே இருக்கிறேன். அவர்கள் வசைபாடட்டும். வசைபாடட்டும்.

அண்ணா ஒருமுறை கேட்டார் சட்டமன்றத்தில், எதிர்க்கட்சிக்காரர்கள் அண்ணாவை தாக்கிப் பேசும்போது, அண்ணா சொன்னார். முதல் அமைச்சராக பொறுப்பேற்ற அண்ணா சொன்னார். என்னை இவ்வளவு காலம் திட்டி திட்டித்தான், இங்கே வந்து உட்கார வைத்திருக்கிறீர்கள். இன்னும் திட்டுகிறீர்கள் என்னை எங்கே உட்கார வைக்க உத்தேசம் என்று கேட்டார். அதைத்தான் நான் கேட்க விரும்புகிறேன். இவர்கள் திட்டாவிட்டால், இவர்கள் வசைபாடாவிட்டால், நம்முடைய டாக்டர் ராமதாஸ் வாயால் இவ்வளவு வாழ்த்து கிடைத்திருக்குமா. இவர்கள் என்னை இவ்வளவு கேவலமாக பேசாவிட்டால், நம்முடைய திருமாவளவன் வாயால் இவ்வளவு பாராட்டுகள் கிடைத்திருக்குமா. நம்முடைய காதர் மொய்தீன் அவர்கள் இவ்வளவு போற்றி புகழ்ந்திருப்பாரா.

அம்மையார் அவர்களே என்னை நன்றாக திட்டுங்கள். வசைபாடி பொழியுங்கள். நீங்கள் திட்ட திட்ட, நீங்கள் வசைபாடி பொழிய பொழிய எனக்கு அன்பால், பாசத்தால், பூரிப்பால், உறவால், உண்மையான இதயத்தால் புகழ்பாட, புகழ்பாடி பொழிய டாக்டர் அவர்களும், திருமா போன்றவர்களும் இருக்கிறார்கள். எனவே நான் அவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

இந்த அன்பு, இந்த உறவு இருந்தால் போதும். என்னை பாராட்டியவர்கள், என்னை திட்டியவர்கள், என்னை வசைபொழிந்தவர்கள் யாராக இருந்தாலும் இன்று இல்லாவிட்டாலும் நாளை எனக்கு பிறகு என்னை வாழ்த்தத்தான் போகிறார்கள். என்னை இழிவுப்படுத்தியவர்கள் எல்லாம், ஒரு காலத்திலே என்னை கேவலப்படுத்தியவர்கள் எல்லாம், அதற்காக கண்களிலே கண்ணீர் துளிகளை ஏந்தி கொண்டு வந்து, வருந்திய காலத்தை நான் பார்த்திருக்கின்றேன். நான் அதற்காக கவலைப்படவில்லை. அதனால்தான் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன அந்த வைர வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்ல விரும்புகிறேன்.

எனக்கு இவர்கள் வாழ்த்தினாலும், வாழ்த்தாவிட்டாலும் இவர்கள் நம்மை தாக்கினாலும், தாக்காவிட்டாலும், என்னுடைய உற்றார், உறவு என்னுடைய பக்கத்திலே அமர்ந்து இருக்கிறது. என்னுடைய உற்றார் உறவினர்கள் என் எதிரே அமர்ந்திருக்கிறீர்கள். உங்களைவிடவா. உங்களை விட்டா அவர்களுடைய உறவை நாடப் போகிறேன். இல்லை.

இங்கே இருக்கிற நானும், காதர்மொய்தீனும் மதத்தால் வேறுபட்டவர்கள். நானும், திருமாவளவனும் வகுப்பால் வேறுபட்டவர்கள். நானும், டாக்டர் ராமதாசும் சமுதாயத்தால் வேறுபட்டவர்கள். இப்படி வேறுபாடுகளையெல்லாம் ஒருமைப்பாடாக ஆக்கிய பெருமை யாருக்கு?, தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்குத் தான்.

அந்த இயக்கத்தின் சார்பிலே இந்த ஊரிலே பகுத்தறிவு பிரசாரம் நடத்தியபோது 100 பேர் 200 பேரை பார்த்த இந்த இடத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பேரை பார்த்தபோது நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோமா இல்லையா, சுயமரியாதையுடன் இருக்கிறோமா இல்லையா, அந்த வெற்றிக்கு அடையாளம்தான் இங்கே வீற்றிருக்கின்ற உங்கள் கரவொளி, வாழ்த்து முழக்கம்.

நாங்கள் வரும்போது எங்களை கண்குளிர பார்த்து வாழ்த்திய முழக்கம். எனவே இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியான நேரத்தில் உங்களை கேட்டுக்கொள்வது இப்போது காரியம் பெரிது, வீரியம் பெரிதல்ல. ஜனநாயக கடமை ஆற்ற வேண்டிய காரியம். மணி 10 ஆகிவிட்டது. தேர்தல் ஆணையம் மிக கெடுபிடியாக இருக்கிறது. நான் முதல்வராக இருந்தாலும் சட்ட திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவன். தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சட்டதிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை நான் பதவியில் இருக்கும்போது கேட்க விரும்பவில்லை. பதவியை நீங்கள் விலக்கி வைத்தால் அவைகளையெல்லாம் கேட்க வேண்டிய இடத்தில் கேட்க வேண்டிய நேரத்தில் நான் கேட்பேன் என்றார் கருணாநிதி.

முன்னதாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் நிதியமைச்சர் க. அன்பழகனை கருணாநிதி பிரச்சாரம் செய்து பேசுகையில், திமுக அரசு எவ்வளவு மேன்மையானது, ஏழை, எளிய மக்களுக்குத் தேவையானது என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவுத்திடல் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார். "இந்தியாவிலேயே ஏழை, எளிய மக்களுக்குப் பாடுபடுகின்ற ஒரே ஆட்சி, தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சிதான். அதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்'' என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்படிப்பட்ட முற்போக்கான மாநிலம் இப்போது திமுகவின் கையில் இருக்கிறது என்றார்.

பின்னர் கொளத்தூரில் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருணாநிதி பேசுகையில், ஸ்டாலின் எனது மகன் என்பதைவிட மக்களுக்காக, கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். பல தியாகங்கள் செய்து சிறையைக் கண்டு அஞ்சாமல் இயக்கத்தை வளர்த்த, வளர்க்கின்ற ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+