ஊழலில் திளைக்கும் திமுக-காங். கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்: அத்வானி
திண்டுக்கல்: தமிழகத்தில் தாமரை மலர வேண்டும். ஊழலில் திளைக்கும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
திண்டுக்கல்லில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் மூத்த பாஜக தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசினார். அவரது கூட்டத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் அத்வானி பேசுகையில், நான் திண்டுக்கல் வருவது இதுவே முதல்முறை. இந்த பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டில் பொதுப் பிரச்சனையாக ஊழல் உள்ளது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை ஊழல் பரவியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் அரசிற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை எதிர்கட்சிகள் கூறவில்லை. பொது கணக்கு குழு கூறியுள்ளது. குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்க மறுத்த காங்கிரஸ் கட்சி ஊழலில் திளைக்கிறது. ஊழலில் திளைக்கும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என கட்சியின் மூத்த தலைவர் சுகுமாறன் நம்பியார் கூறியுள்ளார். நாகர்கோவிலில் தமிழக பாஜக தலைவருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
திண்டுக்கல்லில் தாமரை மலர வேண்டும். தேர்தலில் வாக்களிப்பது மக்களின் கடமை. எனவே அனைவரும் தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தவறாமல் சென்ற வாக்களிக்க வேண்டும் என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications