இலங்கை அருகே மாயமான 4 தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 20 லட்சம் நிதி-அரசு
சென்னை: இலங்கை அரசு கடலில் மீன் பிடிக்கப் போனபோது மாயமான, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நான்கு தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளது.
இந்த நான்கு மீனவர்களையும் பிடித்துச் சென்ற இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கொன்று கடலில் வீசி விட்டதாக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு நிலவி வருகிறது. அவர்களில் ஒருவரது உடல் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கடந்த 2-ந் தேதி அன்று ராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற விக்டர்ஸ், மாரி முத்து, அந்தோணிராஜ் மற்றும் ஜான்பால் ஆகிய 4 மீனவர்கள் ஊர் திரும்பாததால், தமிழக அரசு, இந்தியக் கடலோர காவல் படையினரின் துணையுடன் கடலில் அந்த மீனவர்களைத் தேடும் பணியினை மேற்கொண்டது.
இந்த நிலையில், 6-ந் அன்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இருந்து அழுகிய நிலையில் உள்ள ஒரு உடல் இலங்கையில் டெல்ப் தீவு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வந்தது.
9-ந் தேதி அன்று மீனவர்களின் உறவினர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இறந்த அந்த மீனவரின் உடல் அடையாளம் காணப்பட்டதுடன், அவ்விடத்திலேயே இறுதிச் சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டன.
மீன்பிடிக்கச் சென்று 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், அதில் ஒரு மீனவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும், மீதமுள்ள மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில்; ஏற்கனவே இதுபோன்ற நிகழ்வுகளில் நிவாரண நிதி வழங்கப்பட்டதை முன்மாதிரியாகக் கொண்டு, இந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications