தமிழகத்தை இருட்டில் ஆழ்த்தி விடும் அதிமுக அணியை புறக்கணிக்க வேண்டும்-ராமதாஸ்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வீசி, தமிழகத்தை இருட்டுக்குள் இட்டுச்சென்று விடும் அதிமுக அணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பணம் படைத்தவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஏழைகள் தங்கள் உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளவும், விரும்புகிறவர்களை ஆட்சியில் அமர்த்தவும் கொடுக்கப்பட்ட வாய்ப்புதான் தேர்தல். அந்த வாய்ப்பை தமிழக வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்தி, தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய உதவ வேண்டும்.
மக்களுக்கு நல்லாட்சியை, நிலையான ஆட்சியை வழங்கும் கட்சிகள் தி.மு.க. தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளன. இன்னொரு அணி நெல்லிக்காய் மூட்டையைப் போல ஒற்றுமை இல்லாத அணியாக உள்ளது. தேர்தல் காலத்தில்கூட ஒற்றுமையாக இல்லாதவர்கள், தேர்தலுக்குப் பின் எப்படி ஒற்றுமையுடன் இருப்பார்கள்? தி.மு.க. தலைமையிலான கூட்டணி, மாநில வளர்ச்சிக்கான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி சரித்திரம் படைத்த கூட்டணி. கருவில் இருக்கும் குழந்தைகள் நலன் முதல், முதியவர்கள் நலன் வரை சிந்தித்து, அதற்கான திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை, சாதித்த சாதனைகளை எடுத்துக் கூறும் தி.மு.க. அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அ.தி.மு.க. அணியைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் காப்பாற்றப்படும். இல்லையெனில், தமிழகம் இருண்டு விடக் கூடிய நிலை உருவாகும்.
தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற, உழவர்கள், மீனவர்கள் நலன் காப்பாற்றப்பட, பெண்களுக்கான உதவித் திட்டங்கள் தொடர, கச்சத் தீவு மீட்கப்பட, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகள் நிலைத்திட, பாதியில் நின்று போன சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேற தி.மு.க. அணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'ஆஃப்" அடிக்க சொன்னவருக்கு 'ஆப்பு" அடிப்போம்-ராமதாஸ்:
முன்னதாக நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து அக்கட்சியின் ராமதாஸ் பேசுகையில்,
செஞ்சி கோட்டையில் ரோப்கார் திட்டம் நிறைவேற்ற கருணாநிதியை சந்தித்து நிதி ஒதுக்க கோரிக்கை வைப்பேன். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஒழுங்கு இல்லாமல் உள்ளது. இதனை கண்டித்து தேர்தல் முடிந்த பிறகு போராட்டம் நடத்துவேன். எனக்கு போராட்டம் என்பது அல்வா சாப்பிடுவதுபோல. நத்தன் கால்வாய் திட்டம், பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் கலை கல்லூரி அமைக்க பாடுபடுவேன்.
இங்கு அமைந்துள்ள கூட்டணி, செஞ்சி கோட்டையை விட வலுவானது. இதைவிட தமிழகத்தில் கூட்டணி உண்டா? சாதனை தொடர வேண்டுமானால் கருணாநிதி ஆட்சிக்கு வரவேண்டும் என சோனியாவும், கருணாநிதியின் சாதனை தொடர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கும் பேசினர். 'ஆஃப்" அடிக்க சொன்னவருக்கு, 'ஆஃப்" அடிக்காமலேயே 'ஆப்பு" அடிப்போம் என்றார்.
விஜயகாந்துக்கு அன்புமணி அறிவுரை:
ஒரு தலைவர் என்றால் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று விஜயகாந்துக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிவுரை கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஏதேனும் திட்டங்களை நிறைவேற்றியுள்ளாரா? விஜயகாந்த் வேட்பாளர்களை அடிக்கிறார். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் சேர்ந்து பிரசாரம் செய்தால், நம்மை அடித்து விடுவார் என்ற பயத்தில் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை.
ஆப் அடித்தால் ஆப்பு அடிப்பேன் என்றார். ஒரு தலைவர் என்றால் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை, ஜெயலலிதா நிறுத்துவது வழக்கமாக உள்ளது.
கலைஞர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கினார். நெசவாளர்களுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கினார். மக்களின் பசியை போக்கியவர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு லேப் டாப் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆடு, மாடு இலவசமாக தருகிறேன் என்கிறார். நம் பிள்ளைகளை ஆடு, மாடு மேய்க்க சொல்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications