அசோகன் கொலை-நேர்மையாக விசாரிக்க விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: பென்னாகரம் ஒன்றிய தேமுதிக நெசவாளர் அணிச் செயலாளர் அசோகன் கொலை வழக்கு விசாரணையை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் தேமுதிக நெசவாளர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அசோகன் தனது தொகுதியில் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும்போது, தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அசோகன் தனது தொகுதியில் ஜனநாயக பணியில் ஈடுபட்ட ஒரே காரணத்திற்காகவும், அவரால் மாற்றுக் கட்சியினரின் வாக்கு சிதறிப் போய்விடும் என்று எண்ணி அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு அவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இருபத்து ஏழு வயதான நமது கழக முன்னோடியை துடிக்க, துடிக்க அடித்துக் கொன்றிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது நான் ஏற்கனவே சொன்னதைப்போல இந்த நாடு ரவுடிகளின் கூடாரமாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்பது இந்த நிகழ்ச்சியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
படுகொலை செய்யப்பட்ட அசோகன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படுகொலைக்கு காரணமானவர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த ரவுடிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்து நேர்மையான முறையில் விசாரணை செய்ய காவல்துறையினரையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தா.பாண்டியன் கண்டனம்:
பென்னாகரம் தொகுதி தேமுதிக தொண்டர் அசோகன் கொலை செய்யப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ந.நஞ்சப்பனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேமுதிக தொண்டர் அசோகன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அசோகனுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இளம் வயதில் கணவனை இழந்து தவிக்கும் அவரது மனைவிக்கு யாராலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications