இலங்கையின் உலகக் கோப்பை தோல்வியால் தமிழக மீனவர்கள் கொலை: கோர்ட்டில் வழக்கு
மதுரை: இந்தியா உலகக்கோப்பையை வென்ற ஆத்திரத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொலை செய்திருக்கலாம் என்று தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக பதில் அளி்ககுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது,
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணி ராஜ், திருச்சுழியைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோர் கடந்த 2-ம் தேதி கடலுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற மறுநாளை காலை 399 விசைப்படகுகள் கரை திரும்பின. ஆனால் அவர்கள் விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை. காணாமல் போனவர்களைத் தேடிச் சென்ற படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இலங்கை நெடுந்தீவு பகுதியில் ரத்தக்காயங்களுடன் விக்டஸ் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தோணிராஜ் உடல் தொண்டி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. மற்ற 2 மீனவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
கடந்த 2-ம் தேதி நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா இலங்கையைத் தோற்கடித்து கோப்பையை கைபற்றியது. இந்த ஆத்திரத்தால் தான் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி கடலுக்குள் போட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது.
தமிழக மீனவர்கள் சென்ற படகையும் காணவில்லை. எனவே மாயமான 2 தமிழக மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ராஜேசுவரன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய உள்துறை செயலாளர், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், தமிழக உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு விசாரணை வரும் 25-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications