சித்திரை மாதப் பிறப்பு-ஜெயலலிதா, தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சித்திரை மாதப் பிறப்பையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அகம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
சர்வாதிகார குடும்ப ஆட்சியைத் தகர்த்தெறிந்து புதிய வளர்ச்சியையும் மலர்ச்சியையும் விடுதலையையும் தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் மக்களாட்சி மலரும் ஆண்டாக, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆண்டாக, இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக மாற்றும் ஆண்டாக மாற்றங்களை மக்களுக்குத் தரக் கூடிய ஆண்டாக இந்தப் புத்தாண்டு விளங்கட்டும்.
மலர இருக்கும் கர ஆண்டில் தமிழர் தம் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இனிமையும் இன்பமும் செழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த சித்திரைத் திங்கள் முதல் இதுகாறும் தமிழகத்தில் நிகழ்ந்த எண்ணற்ற நல்லவை மேன்மேலும் தொடர்ந்து மக்களின் அமைதி, நிம்மதியான வாழ்வு சிறந்திடவும், சாதி, மத பேதமின்றி அனைவரிடையேயும் நல்லிணக்கம் மேம்படவும் நாட்டில் வன்முறை ஒழிந்து ஒற்றுமை, ஒருமைப்பாடு உயர்ந்திடவும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தியில்,
அனைத்து தீய செயல்களுக்கும் விடை கொடுத்து தமிழன் உரிமைகள் அனைத்தும் காக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்றிலே நிலை நிற்க வழிகாட்டும் என்று நம்பி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.