கள்ளழகருக்கு ரூ. 1.50 கோடியில் புதிய தங்கக் குதிரை
மதுரை: அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கப் பயன்படுத்தும் தங்கக் குதிரை மாற்றப்பட்டு ரூ. 1.50 கோடியில் புதிய தங்கக் குதிரை செய்யப்பட்டுள்ளது. இந்த குதிரையில்தான் கள்ளழகர் வருகிற 18ம் தேதி மதுரையில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார்.
தற்போது கள்ளழகர் பவனி வரும் தங்கக் குதிரை மிக மிகப் பழையானது. அதாவது 300 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதாகும். இதை அவ்வப்போது சீர் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
மிகப் பழமையானதாக இருப்பதால், மதுரைக்கு வரும் வழியெங்கும் உள்ள மண்டகப் படிகளில் இறக்கி பின்னர் தூக்கும்போது குதிரை வாகனத்தின் இணைப்புகள் பலமிழந்துள்ளன.
மேலும் வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது பக்தர்கள் தண்ணீர்ப் பீய்ச்சியடிப்பார்கள். அது பட்டு பட்டு குதிரையின் தங்கப் பூச்சும் தகர்ந்து கொண்டே வந்தது.
இதையடுத்து தங்கக் குதிரையை புதிதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதலில் 13 கன அடி தேக்கு மரத்தில் குதிரை வாகனம் தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் தாமிரத் தகடுகள் பதிக்கப்பட்டன.
இதையடுத்து கோவிலில் இருந்த 5.520 கிலோ தங்கத்தையும், திருக்கோஷ்டியூர் எம்பெருமான் சாரிட்டிஸ் வழங்கிய 400 கிராம் மற்றும் பக்தர்களிடமிருந்து பெற்ற தங்கத்தைக் கொண்டு புதிய குதிரைக்கு தங்க முலாம் பூசப்பட்டது.
இந்தப் புதிய தங்கக் குதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் புதிய குதிரை வாகனத்தில்தான் அழகர் வைகை ஆற்றில் இந்த ஆண்டு இறங்கவுள்ளார்.
வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு
இதற்கிடையே அழகர் ஆற்றில் இறங்குவதற்கு வசதியாக வைகை அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications