திருடர்களால் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட வீராங்கனைக்கு ரயில்வே வேலை
டெல்லி: ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்ததபோது சங்கிலித் திருடர்களால் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டதில் தனது இடது காலை இழந்துள்ளார் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை அருனிமா சிங். அவருக்கு தற்போது ரயில்வே துறை வேலை கொடுத்து உதவியுள்ளது.
ஒருபக்கம் கிரிக்கெட் வீரர்கள் மீது கோடி கோடியாக கொட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் மற்ற விளையாட்டுகள் அனாதைப் பிள்ளைகள் போல, சவலைப் பிள்ளைகள் போல கவனிப்பாரின்றி தவித்துக் கொண்டிருக்கின்றன.
திறமை இருந்தும் உரிய அங்கீகாரம் இல்லாமல் போவதால், ஏதாவது வேலை தேடி பிழைப்பை ஓட்ட வேண்டிய நிலைக்கு வீரர்களும், வீராங்கனைகளும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அருனிமா சிங். லக்னோவைச் சேர்ந்தவர். தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை. தனது எதிர்காலக் கனவுடன் டெல்லிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். சிஆர்பிஎப்பில் வேலைக்கான இன்டர்வியூவுக்காக அவர் போய்க் கொண்டிருந்தார்.
பொதுப் பெட்டியில் அவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது மூன்று பேர் அவரை நெருங்கி அவர் கழுத்தில் அணிந்து கொண்டிருந்த செயினைப் பறிக்க முயன்றனர். அவரிடம் தவறாகவும் நடக்க முயன்றனர். இதை எதிர்த்துப் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று மடையர்களும், அருனிமாவை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டு விட்டனர்.
இதில் பலத்த காயமடைந்தார் அருனிமா. அவரது இடது கால் படுகாயமடைந்தது. தலையிலும் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தன. தற்போது இடது காலை இழந்துள்ளார் அருனிமா. தலைக்காயமும் குணமாகவில்லை.
படுக்கையில் கண்ணீர் விட்டபடி தனது எதிர்காலத்தை நினைத்து பெரும் கவலையுடன் உள்ளார் அருனிமா. இதுகுறித்து அவர்கூறுகையில், எனது கனவெல்லாம் நொறுங்கிப் போய் விட்டது. எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்தால் போதும். இனியும் யாருக்கும் பாரமாக இருக்க நான் விரும்பவில்லை என்று அழுதபடி கூறினார் அருனிமா.
23 வயதாகும் அருனிமா, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோரின் 3 குழந்தைகளில் கடைசிக் குழந்தை இவர்தான். இவரது தந்தை ராணுவத்தில் ஜவானாக இருந்தவர். தாயார் சுகாதாரத் துறையில் சூப்பர்வைசராக இருக்கிறார்.
தான் கைப்பந்துப் போட்டியில் பிரகாசிக்க முடியாமல் ஆண்கள் எப்போதுமே தடங்கல் செய்து கொண்டே இருப்பார்கள். அதையும் மீறி நான் கடுமையாக போராடி ஒரு நிலையை அடைந்தேன். இந்த நிலையில் மூன்று ஆண்களால் இப்போது எனது எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிற்கிறேன் என்று ஆதங்கத்துடன் கூறுகிறார் அருனிகா.
உ.பி. மாநில அணியில் இடம் பெற்று மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் போய் ஆடியுள்ளார். அவருக்கு கைப்பந்துதான் உயிர். தான் விளையாடி அதன் மூலம் ஒரு வேலை கிடைத்தால் தனக்காக பாடுபடும் குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அதற்குள் இந்த விபரீதம் நடந்துள்ளது.
தற்போது அருனிமாவுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது ரயில்வே. அவருக்கு வேலை தரப்படும் என்று கூறியுள்ள ரயில்வே, அருனிமாவுக்குத் தேவையான செலவுகள் அனைத்தையும் கவனிப்பதாகவும் உறுதியளித்துள்ளது. மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கானும் ரூ. 25,000 நிதியுதவியை அறிவித்துள்ளார்.
அருனிமாவின் கனவுகளை இப்படி சிதைத்து விட்டுப் போய் விட்ட அந்த மூன்று அயோக்கியர்களும் இதுவரை பிடிபடவில்லை என்பது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications