சோனியாவுடன் ப.சி, வாசன் சந்திப்பு-தங்கபாலுவை நீக்க கோரிக்கை
டெல்லி: தங்கபாலுவை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கோரி மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் ஆகியோரின் ஆதரவாளர்கள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் என 19 பேரை கட்சியை விட்டு நீக்கினார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
மைலாப்பூரில் போட்டியிட்ட தனக்கு எதிராக செயல்பட்டதற்காகவும், தனக்கு சீட் ஒதுக்கிக் கொண்டதை எதிர்த்தும் போராட்டம் நடத்தியதால் இந்த நடவடிக்கையை எடுத்தார் தங்கபாலு.
இதையடுத்து தங்கபாலுவுக்கு எதிராக வாசன், சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்ட அனைத்து கோஷ்டி தலைவர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோஷ்டிகள் சார்பில் தங்கபாலுவுக்கு எதிராக தினம் ஒரு போராட்டம் நடந்து வருகிறது. இதைத் திசை திருப்பும் வகையில், இன்று இலங்கை அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி கைதானார் தங்கபாலு.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை டெல்லியில் சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வாசனும் நேற்று மாலை சோனியா காந்தியை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு உள்ள சூழ்நிலை குறித்து சோனியா கேட்டறிந்தார். மேலும் 19 பேரை காங்கிரசிலிருந்து நீக்கி தங்கபாலு அறிவித்தது குறித்தும் வாசன் சோனியாவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தங்கபாலுவை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு வாசனும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது.
ஆனாலும் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தங்கபாலு மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
நீக்கப்பட்டோர் நடவடிக்கை குழுவிடம் முறையிடலாம்-தங்கபாலு:
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள 19 பேரும், வேண்டும் என்றால் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் முறையிடலாம் என்று தங்கபாலு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், தமிழக காங்கிரஸில் இருந்து நான் 19 பேரை நீக்கியது சரியானது தான். அது என் அதிகாரத்திற்கு உட்பட்டது தான்.
கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் மாநிலத் தலைவருக்கு உண்டு என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரிவுத் தலைவர் ஜனார்த்தன் திவேதி மற்றும் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கட்சி மேலிடத் தலைவர்களின் விளக்கம் நீக்கப்பட்ட 19 பேருக்கும் போதுமானது என்று கருதுகிறேன். இதை ஏற்க மறுப்பவர்கள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான் அகில இந்திய காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் முறையிடலாம். அதை விட்டுவிட்டு தொடர் போராட்டம் நடத்துவது, கொடும்பாவியை எரிப்பது, பத்திரிக்கைகளில் அறிக்கை விடுவது எல்லாம் அவர்களின் ஒழுங்கீனத்தை அதிகரிப்பதாகத் தான் இருக்கும்.
அனைத்து காங்கிரசாருக்கும் தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்கும் உரிமை உண்டு. ஆனால் கட்சி மேலிடம் ஒருவரை வேட்பாளராக அறிவித்ததும் அதை மதித்து நடக்க வேண்டும்.
கட்சி விதியை மீறிய காரணத்தால் தான் 19 பேரும் சிக்கலை தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டனர். துரதிர்ஷ்டவசமாக அந்த 19 பேரும் தினமும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு, வேறு வழியின்றி, என்னை இத்தகைய நடவ டிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டனர். நான் கட்சியின் நலன் கருதி தான் இந்த நடவடிக்கை எடுத்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications