மேற்கு வங்கம்-54 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று முதல் கட்டமாக 54 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்தது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 6 கட்டங்களாக நடக்கிறது. இதில் இன்று முதல்கட்டத் தேர்தல் நடந்த 54 தொகுதிகளில் 364 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
முக்கிய கட்சிகளான மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, திரிணமூல்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் 49 பாஜகவினரும், 10 இடதுசாரி கூட்டணி அமைச்சர்களும் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 6 மாவட்டங்களி்ல் மொத்தம் 12 ஆயிரத்து 133 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மத்தியப் படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பதற்றமான பகுதிகளில் பொதுமக்களுக்களின் அச்சத்தைப் போக்க போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். தேர்தலையொட்டி வெளிநாட்டு எல்லைகள், மாநில எல்லைகள் சீல்வைக்கப்பட்டு, வெளி மாநிலத்தவரும், வெளி மாவட்டத்தவரும் நுழைந்துவிடாதபடி கடும் சோதனை நடத்தப்பட்டது.
டார்ஜிலிங், கலிம்பொங்க் ஆகிய மலைப் பகுதிகளில் 16 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வாக்குச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமையே அங்கு சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் இடதுசாரிக் கூட்டணிக்கும், மமதாவின் திரிணாமூல் கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவி சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் மேற்கு வங்கத்தை முன்னேறிய மாநிலமாக்குவோம் என்று சோனியா காந்தி பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார். இடதுசாரி ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக இது அமையும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
முதல் கட்டத் தேர்தல் நடந்து கொண்டிரு்ககும் 6 மாவட்டங்களிலும் மமதா பானர்ஜி தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், சீதாராம் யெச்சூரி, மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் கௌதம் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அதன் மூத்த தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அருண்ஜேட்லி மற்றும் ஹேமமாலினி ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
வரும் மே மாதம் 10-ம் தேதி மேற்குவங்கத்தில் இறுதிக் கட்டத்தேர்தல் முடிவடைகிறது. அதன் பிறகு தான் தமிழகம், கேரளா உள்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறும்.












Click it and Unblock the Notifications