அருணாசலப் பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் 17 பேர் பலி
இடாநகர்: அருணாசலப் பிரதேசத்தில் 23 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர்.
அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியிலிருந்து பவன் ஹான்ஸ் விமான சேவை நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று 18 பயணிகள், 2 விமானிகள், 3 சிப்பந்திகளுடன் அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் நகருக்குக் கிளம்பியது. இந்த ஹெலிகாப்டர் தினமும் இந்த இரு நகர்களுக்கு இடையே இயக்கப்படுவது வழக்கம்.
பிற்பகல் 1.15 மணியளவில் மேற்கு அருணாசலப் பிரதேசத்தின் தவாங் நகரின் ஹெலிபேட் அருகே சென்றபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது. 15 மீட்டர் உயரத்தில் இருந்து மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் அந்த ஹெலிகாப்டர் விழுந்தது.
இதில் இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகிவிட்டனர். 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு இமயமலைத் தொடரில் 11,000 அடி உயரத்தில் உள்ளது தவாங். சீன எல்லையில் உள்ள இந்தப் பகுதிக்குச் செல்ல ஹெலிகாப்டர்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னையில் தரை இறங்கிய விமானத்தின் டயர் வெடித்தது:
இதற்கிடையே ஹைதராபாத்திலி்ருந்து சென்னைக்கு 95 பயணிகளுடன் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் வந்தது. காலை 11 மணிக்கு அந்த விமானம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடு பாதையில் வேகமாக சென்று இறங்கியபின் விமானம் நிறுத்தப்படும் இடம் நோக்கி திரும்பியது.
அப்போது விமானத்தின் ஒரு டயர் வெடித்தது. உடனே விமானி விமானத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications