ராஜ்தானி எக்பிரஸில் தீ: 4 பெட்டிகள் சாம்பல்-பயணிகள் தப்பினர்
ரத்லாம்: மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்தன. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் மத்தியபிரதேசத்தில் உள்ள ரத்லாம் மாவட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் பி-6 மற்றும் பி-7 ஆகிய பெட்டிகளில் திடீர் என்று தீ பிடித்தது. இது அருகில் இருந்த பி-5 மற்றும் சமையல் அறை பெட்டிக்கும் பரவியது. ரயில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பயணிகள் அலறினர். இதை கேட்டவுடன் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். ரத்லாம் மற்றும் உஜ்ஜெயினி ஆகிய நகரங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரயிலில் இருந்த ஆயிரத்து 100 பயணிகள் எந்தவித காயமும் இன்றி தப்பினார்கள். பி-6, பி-7 ஆகிய பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மற்ற இரு பெட்டிகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதமடைந்த 4 பெட்டிகளையும் கழற்றிவி்ட்டு அந்த ரயில் காலை 8.20 மணி அளவில் டெல்லி புறப்பட்டது. அந்த 4 பெட்டிகளில் இருந்த 144 பயணிகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மேற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு பெட்டிகளில் ஏற்பட்ட மின் இணைப்பு கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்காலம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications