5 மாநில தேர்தல் முடிந்ததும் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயரும்
டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் பெட்ரோல் விலை மேலும் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு உயர்நததுள்ளதால் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதை சரிகட்ட பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த வேண்டும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தில் தேர்தல் முடியும் வரை மத்திய அரசு விலை உயர்வை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலருக்கு விற்பதால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என்று இந்தியன் ஆயில் கழகம் கூறியுள்ளது.
தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.4.50 இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது. டீசலுக்கு ரூ.15.79, மண்ணெண்ணெய் விற்பனையில் ரூ.24.74 மற்றும் சமையல் கேஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.297.80 இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்த மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் 13ம் தேதி வெளியாகின்றன.
அதன் பிறகு உடனடியாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications