பதவியை காக்க மீனவர்களின் சாவைப் பயன்படுத்தும் தங்கபாலு-சீமான் கண்டனம்
சென்னை: தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள மீனவர்களின் சாவைப் பயன்படுத்த முயற்சிக்கும் தங்கபாலு வீட்டை முற்றுகையிடுவோம் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
560-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப்படை இதுவரை கொன்று குவித்திருக்கிறது. இவ்வாறு மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு முழு முதற் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே ஆகும்.
ராமேசுவரத்திலும், நாகையிலும் தமிழ் மீனவன் உயிரிழந்து, தலை துண்டிக்கப்பட்டு, கை கால்கள் இழந்து, சித்திரவதைக்கு சிங்கள ராணுவத்தால் உள்ளாக்கப்பட்டு, அவனது வலைகள் அறுக்கப்பட்டு நிர்க்கதியாய் கரை வந்து சேர்ந்த பொழுது மத்திய காங்கிரஸ் ஆட்சி என்ன செய்தது? மீனவனின் உயிரை கூட மதிக்காமல் குறைந்த பட்சம் அவனுக்கு ஒரு ஆறுதல் கூடச் சொல்லாமல் வேடிக்கை பார்த்தது.
பதவியைக் காப்பாற்ற...
மீனவர்கள் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டில் குரல் கொடுத்தால் அவர்களை ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி சிறைக்குள் தள்ளும் கட்சி கொலை செய்த சிங்களக் கடற்படையின் அதிபருக்கு இந்தியாவில் ரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கையை ஐ.நா.சபையே போர்க்குற்றம் புரிந்தது என்று தற்பொழுது அறிவித்துள்ளது.
இந்த கசப்பான உண்மைகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கும் தங்கபாலுவுக்கும் நன்கு தெரியும். ஆனால் தமிழர்களை மடையர்களாக எண்ணி உட்கட்சிப் பிரச்சினையிலும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் தோல்வி அடையும் என்ற நிலையிலும் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்ததற்கு எதிர்ப்பு என்ற பெயரில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் என்று நடத்தியுள்ளார்.
வீட்டை முற்றுகையிடுவோம்
தங்கபாலுவுக்கு மீனவர்கள் பிரச்சினையில் காலம் கடந்தாவது அக்கறை வந்திருக்குமானால் அவர் உண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டியது இனி ஒரு மீனவரின் உயிரும் பறிக்கப்பட மாட்டாது என்று சில நாட்களுக்கு முன் உறுதிமொழி அளித்துச் சென்ற சோனியாவின் வீட்டின் முன்னால் தான். ஆனால் மக்களை ஏமாற்றவும் தனது பதவியைக் காப்பாற்றவும் நாடகம் நடிக்கிறார்.
இந்த நாடக வேடம் அவருக்குப் பொருந்தவில்லை. படுகேவலமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. தனது பதவியைக் காப்பாற்ற மீனவர்களின் மரணத்தைப் பயன்படுத்தும் இது போன்ற மிகவும் இழிவான செயல்களில் தங்கபாலு இனியும் ஈடுபடுவாரானால் அதனை நாம் அனுமதிக்க முடியாது. அவரது வீட்டு முன் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும் என்று கடுமையாக எச்சரிக்கிறேன்.
ஐ.நா. பரிந்துரை நியாயமற்றது
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் இலங்கை அரசு படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேலி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது. இது உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான இலங்கை அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது.
இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிக்கின்றேன், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications